

நிதித் துறையில் கோலோச்சி வரும் ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனம் தற்போது தங்க நகைக் கடன் வணிகத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இந்திய சந்தையிலும் விலையேற்றம் அபரிமிதமாக உள்ளது. சாமானிய மக்கள் தங்கம் வாங்கவே இனி அதிகம் யோசிப்பார்கள் என்ற நிலை தான் தற்போது உள்ளது.
இந்நிலையில் முதன்முறையாக தங்க நகைக் கடன் வணிகத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 1,000 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது பாதுகாக்கப்பட்ட கடன் பிரிவை விரிவாக்கும் நோக்கத்தில், தங்க கடன் வணிகத்தில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது.
ஆதித்யா பிர்லாவின் வருகையால், முத்தூட் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகவே பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் தங்க நகைக் கடன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
வர்த்தக வாய்ப்புகள் அதிகமுள்ள சந்தைகளை குறிவைத்து, வருகின்ற மார்ச் 2027-ம் ஆண்டுக்குள் 300 பிரத்யேக தங்கக் கடன் கிளைகளை படிப்படியாக திறக்க ஆதித்யா பிர்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், மும்பை பங்குச் சந்தையில் ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 3.05% வரை உயர்ந்து, ரூ.408.85-ஐ எட்டியது.
நேரடி கடன் கிளைகளை டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைத்து, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் வெளிப்படையான தங்கக் கடன் சேவைகளை விரைந்து வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து, பாதுகாப்பான கடன்களில் தங்க நகைக் கடன் முன்னணியில் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் சமீபத்தில் டாடா கேபிடல் மற்றும் கோத்ரெஜ் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் தங்கக் கடன் வணிகத்தில் நுழைந்தன.
தற்போது ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனமும் தங்க கடனை வழங்க இருப்பதால் சந்தையில் போட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களைக் கவர பல சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
இதுவரை தனிநபர் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை முதலீடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆதித்யா பிர்லா நிறுவனம், தற்போது ‘பாதுகாக்கப்பட்ட கடன்’ இலாகாவை மேலும் பலப்படுத்த தங்க நகைக் கடன் வணிகத்திலும் நுழைந்துள்ளது.
இந்நிலையில் தங்கக் கடன் வணிகத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
* குறைந்த வட்டியில் கடன், ஒரு கிராமுக்கு அதிக தொகை மற்றும் குறைந்த செயல்முறை கட்டணங்கள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
* ஆன்லைன் தொழில்நுட்பம் மற்றும் உடனடி பணப் பரிவர்த்தனைகளின் மூலம் ஒருசில நிமிடங்களிலேயே தங்க நகைக் கடன் பெறும் வசதிகள் உருவாக்கப்படும்.
* வீட்டு வாசலிலேயே தங்க நகைக் கடன் வழங்கும் சேவைகள் கூட வர வாய்ப்புண்டு. மேலும் தங்கக் கடனுக்கு ஆன்லைன் வழியாகவே வட்டியை செலுத்தும் வசதிகள் எளிமைப்படுத்தப்படும்.
* மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கக் கடனில் இறங்கியிருப்பதால், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் பாதுகாப்பு, எடை மதிப்பீடு மற்றும் காப்பீடேகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
* ஆதித்யா பிர்லா நிறுவனம் 1,000 புதிய கிளைகளைத் திறப்பதால், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு கடன் பெறும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
* தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அடகு கடைக்காரர்களை மட்டுமே மக்கள் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் குறைந்து, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை எளிதில் அணுகலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்