
இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தாலும், அதன் விற்பனை குறைந்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும். தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதை வாங்குவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்துவதற்காக மட்டுமில்லாமல் தங்களது அவசர தேவைக்கு உதவும் பொருளாகவும் தங்கத்தை பார்க்கிறார்கள்.
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். முன்பெல்லாம் அடகு கடைகளில் பணத்தேவைக்கு நகையை அடமானம் வைத்தவர்கள். தற்போது அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த கட்டுப்பாடுகள் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் இருந்தது. அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் நாளில், அதற்கான முழு வட்டித்தொகையை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளும் முறை தான் அனைத்து வங்கிகளிலும் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள், அதாவது உங்கள் நகைக்கான கடன் வாங்கிய நாள் முடிவதற்குள், கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். பின்னர் அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைத்து பணம் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்கும் சூழ்நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி வங்கிகளின் இந்த விதிமுறையால் ஏழை எளிய மக்கள் அதிக வட்டிக்கு மீண்டும் அடகு கடைக்கு சென்று நகையை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த விதிமுறைக்கே இன்னும் விடை தெரியாத நிலையில், மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, மீண்டும் நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறையில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
* தற்போது வங்கிகளில் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று, அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். அதாவது தங்க நகையை வாங்கிய ரசீதை கண்டிப்பாக வங்கிகளில் சமர்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
* முக்கிய விதிமுறையாக ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதி என்றும் அதற்கு மேல் அந்த நபரில் பேரில் நகை அடமானம் வைக்க அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
* தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விதிமுறையும் இதில் அடங்கும்.
* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அதாவது சுத்தமான தங்கமா என்ற சான்றிதழை வழங்க RBI அறிவுறுத்தியுள்ளது.
* தங்க நகைகள் மட்டுமின்றி வெள்ளி பொருட்களையும் அடமானம் வைத்து கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
* தங்க நகை கடன் வழங்கும் வங்கிகள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நகைக்கடன் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவுத்தியுள்ளது.
* நகையை அடமானம் வைத்தவர் நகைக்கான கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் அவரது தங்கத்தை திருப்பி தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி விதிமுறையை அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளால் தங்க நகையை நம்பியுள்ள சாமானிய மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு போடப்பட்ட நகைகளுக்கு ரசீதிற்கு எங்கே போவது, நாங்கள் எங்கே சென்று தூய்மை சான்றிதழ் பார்ப்பது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இப்படி எளிய மக்களை பாதிக்கும் அடுக்கடுக்கான திட்டங்களை ரிசர்வ் வங்கி போட்டு கொண்டே போவது, மக்களை வாழ வைப்பதற்கு தானா? மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதற்கு தேவையான திட்டமாக கொண்டு வாருங்கள். இதற்கு அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.