

கரண்ட தொட்டா தான் ஷாக்கடிக்கும், ஆனா இப்போ தங்கம் விலையை கேட்டாலே ஷாக்கடிக்கும். ஆமாங்க இந்தியாவில், தங்கத்தோட விலை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்க தொடங்கி இன்று வரை உயர்ந்து கொண்டே வந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. இதனால், தங்கத்தின் பயன்பாடு மற்றும் விற்பனையில், மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. தங்கத்தை சிலர் அழகுக்காகவும், சிலர் திருமணத்திற்கு சேர்த்து வைப்பதற்காகவும், வேறு சிலர் வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகக் கருதியும் வாங்குகிறார்கள்.
இந்தியாவில் சமீப காலங்களில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை எட்டி வருவதால் இனிமேல் தங்கம் விலை குறையாது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்று கருதும் பலரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். தங்கத்தின் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், போர், அரசியல் பதட்டங்கள் போன்றை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவதால் இதனால் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் பார்க்கப்படுகிறது.
அதனால், உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயர்கிறது. அதேபோல் உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 79,389 ரூபாயும், கடந்த 20 ஆண்டுகளில் 96,682 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2005-ம் ஆண்டு (24 காரட்) 10 கிராம் 7,638 ரூபாயாக இருந்த தங்கத்தில் விலை, அதுவே 2015-ம் ஆண்டு (24 காரட்) 10 கிராம் தங்கத்தில் விலை 24,931 ரூபாயாக உயர்ந்தது. அதுவே கடந்தாண்டு (2025) ஆகஸ்ட் மாதத்தில் (24 காரட்) 1,04,320 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தில் விலை இன்று (19.6.26) ரூ.1,48,040 அதிகரித்துள்ளது. 10 மாதங்களில் கிட்டத்தட்ட ரூ.43,720 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை அதன் விலை அதிகரித்தாலும் அதை வாங்கும் மோகம் இந்தியர்களிடையே குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக சர்வே கூறுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560க்கும், கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில், இந்த சிறிய சரிவு வாங்குபவர்களிடையே, குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களிடையே வாங்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ தாண்டி, சுமார் ரூ.21,600 வரை உயரக்கூடும் என அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகி நடுத்தர குடும்பங்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
அதாவது, 2026 இறுதிக்குள் இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.21000ஐ தாண்டி சுமார் ரூ.21600 வரை உயரக்கூடும் என உலகில் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கம் விலையானது நாள்தோறும் தாறுமாறான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் மேற்கு ஆசியப் போரினால் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயரக்கூடும் என ஆய்வறிக்கை கூறியுள்ளது.
அந்த வங்கியின் புதிய அறிக்கையின்படி, அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை, தற்போதைய விலையை விட 40%க்கும் அதிகமாக உயர்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் இந்த மாபெரும் மாற்றம் நமது இந்திய தங்கச் சந்தையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது, இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ. 1.53 லட்சமாக உள்ளது. ஜேபி மோர்கன் கணித்தபடி, 40 சதவிகிதம் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டால், இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 10 கிராமுக்கு ரூ.2.16 லட்சத்தை எட்டக்கூடும். இது உண்மையானால், தங்கம் வாங்குவது சாமானிய மக்களுக்கு கனவாக மாறும்.
மேலும், பணவீக்கம் குறித்த அச்சம் மற்றும் உலக அரசியல் பதற்றம் தங்கத்தின் தேவையை அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நம்பும் அனைவருக்கும் ஜேபி மோர்கனின் அறிக்கை ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.