ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறைந்தபாடில்லை. ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தரிசன வரிசையில் இனி கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தப்பட உள்ளது. அமிர்தசரஸ் தங்ககோவிலில் உள்ளது போல் திருப்பதி கோவிலுக்கு தனி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஸ்கேனிங் மையம் அருகே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல் திருப்பதி கோவிலுக்கு வரும் மாற்று மதத்தினர், வைகுண்டம் வரிசை வளாகத்தில் கட்டாயமாக உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்து மதத்தை சாராத மாற்று மதத்தினர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் கட்டாயம் அவர்கள் இந்து கடவுளை நம்புகிறோம். இந்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டு உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் தரிசனத்திற்கு செல்லும் மாற்று மதத்தினர் கட்டாயம் நெற்றியில் நாமம் போட்ட பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும்போது பாரம்பரிய உடையணிந்து, கோவில் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்க என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கூறினாலும், இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விவாதங்களும் கிளம்பியுள்ளன.
தற்போது இந்த விதி தீவிரமாக அமலில் உள்ளதால், மாற்று மத பக்தர்கள் தரிசனத்திற்கு முன் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.
மேலும், சந்திர கிரகணம் காரணமாக, திருப்பதி கோவில் நடை வரும் மார்ச் 3-ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை மூடப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, சுத்திகரிப்பு மற்றும் புண்யாஹவசனமும் செய்யப்பட்ட பின்னர் இரவு 8.30 மணி முதல் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் திருமலை திருப்பதி பக்தர்களுக்கான முக்கிய செய்தியாக TTD-யின் கீழ் உள்ள அன்னபிரசாத விநியோக மையங்கள் வருகிற மார்ச் 3-ம்தேதி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு இருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்பட்டிருக்கும்.