

சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கார் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பழைய கார்களை கொடுத்து புதிய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் நடைமுறையில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், சற்று காலதாமதம் ஆகின்றன.
இந்நிலையில் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து, புது காரை வாங்கிச் செல்ல இனி வாரக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; வெறும் 55 நிமிடங்களே போதும். இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஸ்பின்னி (Spinny) நிறுவனத்துடன் இணைந்து, நிசான் மோட்டார் (NISSAN MOTOR) நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வழக்கமாக ஒரு பழைய காரை விற்கும் போது மதிப்பீடு செய்து, பேப்பர் உள்ளிட்ட வேலைகளை முடித்து, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் புதிய காரை டெலிவரி எடுக்க பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகும். ஆனால் சில முன்னணி நிறுவனங்கள் மற்றும் கார் எக்ஸ்சேஞ்ச் தளங்கள் தற்போது உடனடி எக்ஸ்சேஞ்ச் திட்டத்தைக் கொண்டு வந்துளளன.
இத்திட்டத்தின் படி இனி பழைய கார்களை மாற்ற வெறும் 55 நிமிடங்களே போதுமானது. இந்த அதிரடி சலுகை பழைய காரை மாற்ற நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
55 நிமிடங்களில் என்ன நடக்கும்?
* நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் காரின் தற்போதைய நிலை, இன்ஜின் தரம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் ஒருசில நிமிடங்களிலேயே சரிபார்க்கப்படும்.
* காரின் தற்போதைய நிலையைப் பொறுத்து, சந்தை விலைக்கு ஏற்ப சிறந்த விலை அப்போதே நிர்ணயிக்கப்படும்.
* பழைய காரின் ஆவணங்களை ஒப்படைப்பது முதல் புதிய காரின் முன்பதிவை உறுதி செய்வது வரை அனைத்தும் ஒரே இடத்தில் செய்து முடிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
1. பழைய காரின் அசல் RC புத்தகம்
2. நடைமுறையில் உள்ள காப்பீடு
3. ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு
4. காரின் 2 சாவிகள்
5. கார் லோன் இருந்தால், வங்கி வழங்கிய NOC சான்றிதழ்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் தற்போது NISSAN GRAVITE கார்களை மட்டுமே 55 நிமிடங்களில் வாங்க முடியும். மேலும் ரூ.25,000 சலுகையுடன், 5.55% குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற கார்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு:
55 நிமிட சலுகை பெரும்பாலும் காரின் தொழில்நுட்ப மற்றும் ஆவணச் சரிபார்ப்புக்கு மட்டுமே பொருந்தும். சில நேரங்களில் ஆர்டிஓ பதிவு மற்றும் வங்கிக் கடன் நடைமுறைகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படலாம்.