

சபரிமலை சீசன் தொடங்கி விட்டதால், நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்கத் தொடங்கி விட்டனர். நடப்பாண்டு சபரிமலையில் மண்டல பூஜை நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27ஆம் தேதி வரை நடக்கிறது. அதோடு அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி தரிசனமும், அதனையொட்டி சிறப்பு பூஜையும் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக சபரிமலை தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழக அரசு ஐய்யப்ப பக்தர்களுக்கு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கவிருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் தென்மாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
பெரும்பாலும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, வாகனங்களை புக் செய்து மலைக்குச் சென்று வருவது வழக்கம். அதேநேரம் ரயிலில் பயணம் செய்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில் தென்மாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டின் மதுரை வழியாக சபரிமலைக்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹஜூர் சாஹிப் நந்தெத் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது (07111), சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கேரளாவின் கொல்லம் பகுதிக்குச் செல்லும். இந்த ரயில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கத்தில் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை, வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 5:40 மணிக்கு மகாராஷ்டிராவிற்கு சிறப்பு ரயில் (07112) இயக்கப்படும். இந்த ரயில் அடுத்த நாள் இரவு 9:30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத்தைச் சென்றடையும். த
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த சிறப்பு ரயில் திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் வழியாக செல்லும்.
இந்த ரயிலில் 2 இரண்டடுக்கு ஏசி படுக்கை வசதிப் பெட்டிகளும், 8 மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதிப் பெட்டிகளும், 4 ஸ்லீப்பர் பெட்டிகளும், 2 பொதுப் பெட்டிகளும் உள்ளன. அதோடு ஒரு சரக்கு பெட்டியும், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பெட்டியும் உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ரயில்வேயின் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.