
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளில் குரூப்4 தேர்வு தான் தேர்வர்கள் மத்தியில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். நடப்பாண்டு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி 3,935 காலிப் பணியிடங்களுக்கான குரூப்4 தேர்வு நடைபெற்றது. வழக்கத்தை விட இம்முறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் கலந்தாய்வின் போது கூடுதலாக பணியிடங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 4,662 ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குரூப்4 தேர்வின் மூலம் வாரியங்கள், அமைச்சுப் பணிகள், வனத்துறைப் பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் மூன்றே மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
நடப்பாண்டு நடைபெற்ற குரூப்4 தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்களும், கல்வி வல்லுனர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் குரூப்4 வினாத்தாளுக்கான விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இதில் கிட்டத்தட்ட 10 கேள்விகளுக்கும் மேல் தவறான விடையை டிஎன்பிஎஸ்சி பரிந்துரைத்ததாக தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இறுதியான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி கூடுதலாக 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அறிவிப்பு குரூப்4 தேர்வை எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர கலந்தாய்வின் போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 150 முதல் 153 வரை கட் ஆஃப் இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் கட் ஆஃப் மதிப்பெண் 142 முதல் 147 ஆக குறைய அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கலந்தாய்வின் போது பணியிடங்களின் எண்ணிக்கை உயரும் என்பதால் 140 மதிப்பெண்கள் எடுத்தாலே வேலை கிடைத்து விடும் என சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி 145-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்து இருந்தால், அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.