இந்தியாவில் பொதுவாக 4 வகையான பெட்ரோல் உள்ளது. அதாவது, ரெகுலர் பெட்ரோல் (RON 91-92), Premium பெட்ரோல் (RON 95), E10 பெட்ரோல், E20 பெட்ரோல். இந்நிலையில் இன்று முதல் (ஏப்ரல் 1-ம்தேதி) நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், 20 சதவிகித எத்தனால் கலந்த E20 பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
E20 பெட்ரோல் என்பது 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கலந்த ஒரு சூழல் நட்பு எரிபொருளாகும். 20% எத்தனால் கரும்பு அல்லது மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனால் அதிக ஆக்டேன் (Octane) கொண்டிருப்பதால், என்ஜின் செயல்திறன் மற்றும் முடுக்கம் (Acceleration) சிறப்பாக இருக்கும். சாதாரண பெட்ரோல் விலையிலேயே கிடைக்கும் என்றாலும் எரிபொருள் திறன் சற்று குறையலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் உங்கள் கார் 2023-க்கு முந்தைய மாடல் என்றால், நீங்கள் கொஞ்சம் அலெர்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வாகனம் பழைய மாடலாக இருக்கும் பட்சத்தில், கரும்புச் சாறிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பெட்ரோல், உங்கள் வண்டியின் மைலேஜை 5-10% வரை குறைக்கலாம் என ஆட்டோ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது 2023-க்கு பின் வாங்கிய வாகனங்களுக்கு E20 மிகவும் பாதுகாப்பானது. பழைய வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முன், வாகன உற்பத்தியாளரின் கையேட்டை (Owner's manual) சரிபார்ப்பது நல்லது.
இதற்கு முக்கிய காரணம், பழைய இன்ஜின்கள் இந்த புதிய எரிபொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை என்பது தான். அந்த பெட்ரோலை நீண்ட காலம் பயன்படுத்தினால் உங்கள் வாகனத்தின் இன்ஜின் பாகங்கள் விரைவில் பழுதடையலாம் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள். ஆனால், மத்திய அரசே ‘E20’ பெட்ரோலால் மாசுபாடு குறையும், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்று கூறுகிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் E20 பெட்ரோல் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் அளவை கொண்டு தான் விற்பனை செய்ய வேண்டும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
வாகனங்களில் இன்ஜின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் அதிக அழுத்தத்திலும் சீராக எரிவதை குறிக்கும் அளவீடு தான் ஆக்டேன். ஆக்டேன் குறைந்தால் பெட்ரோல் வெடித்து விடும். ஆக்டேன் அதிகரித்தால் சரியான நேரத்தில் தான் எரியும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 85 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அதே சமயம், எத்தனாலை கலப்பது, அந்நியச் செலாவணியை சேமிப்பதுடன், மாசுபாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது. மேலும் Biofuel பயன்படுத்துவதால் அதிக காற்று மாசை குறைக்கலாம் என்று அரசு கூறுகிறது. இதனால் தான், மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
சுருக்கமாக சொல்வதென்றால் வெளிநாட்டு செலவை குறைப்பதற்காகவும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், காற்று மாசை குறைப்பதற்காகவும், இந்த E20 பெட்ரோல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.