

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (ஜூலை 4) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ஆளுங்கட்சியுடன் இணைந்து, மக்கள் பணியாற்றுவதே ஆளுநர் மாளிகையின் இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கும், ஆளுங்கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாக அடிக்கடி ஆளுநருக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியது ஆளுங்கட்சி. ஆனால் தற்போதைய ஆளுநர், ஆளுங்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவோம் எனத் தெரிவித்து இருப்பது அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
நடந்து சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்ற போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், திமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக, பெரும்பான்மை உள்ள கட்சியாக கருதி தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என தவெக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டும் ஆட்சி அமைக்க அழைக்கப்படுபவர் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவோடு தவெக கூட்டணி ஆட்சியை அமைத்தது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசினார். இந்நிலையில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் உதவி தேவைப்பட்டால், ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் கூறுகையில், “பொதுமக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்போர், உதவி தேவைப்பட்டால் எவ்வித தயக்கமும் இன்றி ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம். என்னிடமும் அரசிடமும் ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால் மக்கள் தெரிவியுங்கள்; நாம் இணைந்து செயல்படுவோம்.
பொதுமக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண முதல்வர் விஜய்யை வலியுறுத்துவேன். இதற்காக தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவேன். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
தற்போது வரை தமிழ்நாட்டில் சாதி என்ற அடையாளம் உள்ளது. அது தொடர்ந்து வளர்வதற்கு பிரிட்டிஷ்காரர்கள் தான் முக்கிய காரணம். மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் சாதியின் பெயரைக் கேட்டு, இவர்கள் இந்த சாதி என தெரியப்படுத்தி பிரிட்டிஷார் பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர்” என ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே நடந்த அரசியல் மோதல்கள் மறைந்து, ஆக்கபூர்வமான நிர்வாகம் பிறந்துள்ளதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், இனி பிரச்சினை என்றால் ஆளுநரைக் கூட தொடர்பு கொள்ளலாம் என்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
இனி வரும் காலங்களிலும் ஆளுங்கட்சிக்கும், ஆளுநருக்கு மோதல் போக்கு இல்லாமல், இணக்கமான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றம் நிச்சயமாக மக்களுக்கு நன்மையை உண்டாக்கும். ஆனால் தவெக அமைச்சர்கள் சிலர் ஆளுநருக்கு எதிரான கருத்துகளையும் கூறி வருகின்றனர். இருப்பினும் நல்ல அரசியலை முன்னெடுக்க ஆளுநர் தற்போது முதல் படியை எடுத்து வைதாதுள்ளார் என்பதே நிசர்சனம்.