

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நாளாக கருதப்படும் இன்றைய தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, பெல்ஜியத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
வெள்ளை மாளிகையின் மரபு படி, விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அதிபரோ, உயர் அதிகாரிகளோ வாங்கக் கூடாது. இந்நிலையில் டிரம்ப் வைர மோதிரத்தைப் பரிசாகப் பெற்றதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சட்ட விதிகளின்படி, வெள்ளை மாளிகையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அதிபர்கள் உட்பட யாரேக்கேனும் அன்பளிப்பாக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டால், அது அரசுக்கு சொந்தமானதாகவே கருதப்படும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்ட இந்த வைர மோதிரம், தனிப்பட்ட பரிசாக அல்லாமல் அமெரிக்க அரசிற்கு சொந்தமாகி விடும் என கருதப்படுகிறது.
முன்னதாக ஜோ பைடன் ஆட்சியில், அவருடைய மனைவி ஜில் பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விலையுயர்ந்த வைரப் பரிசை வழங்கினார். சட்ட விதிகளின் படி இந்தப் பரிசு, அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்ட்வெர்ப் வைர வர்த்தக மையத்தின் நிறுவனர் இசிடோர் மோர்செல், அதிபர் டிரம்பிற்கு ஒரு சிறப்பு வைர மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இவர் உலக வைர மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசாக வழங்கப்பட்ட வைர மோதிரத்தில் 321 வைரங்கள், 56 சபையர் கற்கள், 13 மரகத கற்கள் மற்றும் 6 மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு $25,000 முதல் $35,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.33 லட்சம் ஆகும்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் பழங்கால மரபை மீறி, அதிபர் டிரம்ப் விலையுயர்ந்த வைர மோதிரத்தை பெற்றுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்காவில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணமே, இதற்கு முன்னதாக டிரம்ப் இந்த வைர நிறுவனத்திற்கு இறுக்குமதி வரிச்சலுகை அளித்திருப்பது தான். இதன் காரணமாகவே அதிபர் டிரம்பிற்கு வழங்கப்பட்ட இந்த வைர மோதிரம், ஒருவித சலுகையாக பார்க்கப்படுகிறது.
வரிச் சலுகை பெற்ற ஒரு நாட்டின் நிறுவனம், அமெரிக்க அதிபருக்கு விலையுயர்ந்த பரிசாக வைர மோதிரத்தை வழங்குவது, அரசியல் ரீதியிலான செல்வாக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். இதனை அதிபர் டிரம்ப் எப்படி கையாளப் போகிறார் என்பது பெரும் சவாலாக இருக்கும்.
ஏற்கனவே போர் மற்றும் வரி விதிப்பு விவகாரத்தில் அதிபர் டிரம்பிற்கு எதிராக இருக்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்திலும் அவருக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில் வைர மோதிர பரிசு விவகாரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதால், டிரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பரபரப்பான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.