

PM E-DRIVE திட்டத்தின் (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) கீழ் மின்சார வாகனங்களை (EV) வாங்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டம் இந்தியாவில் மின்சார வாகனப் புரட்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், டிரக், பேருந்துகள் வாங்க ரூ.10,000 முதல் ₹2 லட்சம் வரை அல்லது வாகனத்தின் விலையில் 15% வரை மானியம் வழங்கப்படுகிறது. 2024-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இதற்கு முன்னதாக இதன் கால அளவு மார்ச் 2026 வரை இருந்தது, ஆனால் இப்போது அது 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த PM E-DRIVE திட்டத்தின் நோக்கம், நாட்டில் EV பயன்பாட்டை விரைவுபடுத்துதல், சார்ஜிங் நிலையங்களை நிறுவுதல் மற்றும் இந்தியாவில் வலுவான EV உற்பத்தி சூழலை உருவாக்குதல் ஆகியவை ஆகும்.
இந்தத் திட்டம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்களை pmedrive.heavyindustries.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 9 பெரிய நகரங்களில் 24.8 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
மானிய அளவு:
* இருசக்கர வாகனங்களுக்கு ஒரு kWh-க்கு ரூ.5,000 (அதிகபட்சம் ரூ.10,000), மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும், பேருந்துக்கு ரூ.10000 முதல் ரூ.35 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
* இது வாகனத்தின் தொழிற்சாலை விலையில் (ex-factory price) 15% வரை இருக்கலாம், எது குறைவோ அதுவே வழங்கப்படும். உதாரணமாக நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு ஒரு EV இருசக்கர வாகனம் வாங்குவதாக இருந்தால் உங்களுக்கு ரூ.10000 மானியம் வழங்கப்படும். நீங்கள் மீதமுள்ள ரூ.90000 ஆயிரத்தை மட்டும் கட்டினால் போதும்.
அதாவது நீங்கள் வாங்கும் பேட்டரியின் கிலோவாட் (kW) பொறுத்தே உங்களுக்கு மானியம் வழங்கப்படும். பேட்டரியின் கிலோவாட் அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு கிடைக்கும் மானியத்தின் தொகையும் அதிகரிக்கும். அதாவது பேருந்து, டிரக் போன்றவற்றின் பேட்டரியின் கிலோவாட் அதிகம் என்பதால் அதற்கு கிடைக்கும் மானியம் அதிகமாக இருக்கும்.
மானியம் பெறும் முறை (இ-வவுச்சர்(e-Voucher))
PM E-DRIVE திட்டத்தின் கீழ், தேவையான அரசு சலுகைகளைப் பெற EV வாங்குபவர்களுக்கு e-Voucher களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
* PM E-DRIVE திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற EV டீலரை அணுக வேண்டும்.
* டீலர், PM E-DRIVE போர்ட்டலில் வாடிக்கையாளரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி இ-வவுச்சரை (e-Voucher)உருவாக்குவார்.
* வவுச்சரை டவுன்லோடு செய்வதற்கான இணைப்பு வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு வரும். அதை டவுன்லோடு செய்து கையொப்பமிட்டு டீலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* டீலர் கையொப்பமிடப்பட்ட வவுச்சரைப் போர்ட்டலில் அப்லோடு செய்தபின், வாடிக்கையாளர் மானியம் போக மீதித் தொகையைச் செலுத்தி வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
தகுதியானவர்கள்
* இந்தியராக இருக்க வேண்டும்.
* நீங்கள் வாகனம் வாங்கும் டீலர் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக (authorised dealer) இருக்க வேண்டும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் அந்த கம்பெனி அல்லது டீலர் பதிவு(register) செய்திருக்க வேண்டும்.
* நீங்கள் வாங்கும் இருசக்கர வாகனத்தில் பேட்டரி advanced ஆக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் வாங்கும் சமயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரியாக இருக்க வேண்டும்.
* ஒருவர் ஒரு categoryல் ஒருமுறை மட்டுமே இந்த மானியத்தில் வாகனம் வாங்க முடியும். அதாவது நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை வைத்து இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்கி இருந்தால் மறுமுறை நீங்கள் இருசக்கர வாகனம் வாங்க முடியாது. ஆனால் கார், மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கலாம்.
* உங்களுடைய ஆதார் கார்டு உங்களுடைய மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* அரசுத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது.