

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய தாக்குதல் கிட்டத்தட்ட மூன்று வார காலமாக நீடித்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் கிணறுகள், எரிபொருள் ஆலைகளில் ஈரானும், இஸ்ரேலும் மாறி மாறி தாக்குவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகமாகி உள்ளது. ஒரு ராணுவ மோதலாக தொடங்கிய இந்தப் போர், தற்போது முழு அளவிலான எண்ணெய் அழிப்பு போராக மாறும் அச்சம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா உடனான மோதலால் உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய எண்ணெய் சந்தைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க இப்போதும் கூட சமையல் சிலிண்டர் பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. மக்களிடம் இன்னும் பீதி நிலவுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்கள் ஒரே நேரத்தில் சமையல் கேஸை முன்பதிவு செய்ததால் அவற்றை விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகின.
இதையடுத்து வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய எரிவாயு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வணிக சிலிண்டர் விநியோகம் தடைபட்டு, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. வணிக சிலிண்டர் தடைபட்டதால், டீக்கடைகள், உணவகங்கள், கேண்டீன்கள் உள்ளிட்டவை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இதனால் டீ, காபி மற்றும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
இதை உணர்ந்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கான வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே 30 சதவீத ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், இன்று (மார்ச் 23-ம்தேதி) முதல் கூடுதலாக 20 சதவீத புதிய ஒதுக்கீடு சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த விநியோகம் முந்தைய அளவின் 50 சதவீதத்தை எட்டும். இது சந்தையில் நிலவும் வணிக சிலிண்டர் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குழாய் மூலம் வரும் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், டீக்கடைகள், தாபாக்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் பண்ணை நிறுவனங்கள், மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலையிலான உணவு வழங்கும் உணவகங்கள், அவற்றின் விற்பனை நிலையங்கள், சமுதாய சமையலறைகள், மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ FTL ஆகியவற்றுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு வேறு துறைக்குத் திருப்பி விடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வணிக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகமும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை மீதான சோதனைகள் தொடர்கின்றன. 50 சதவீத விநியோகத்தின் கீழ் தகுதி பெறுவதற்கு முன்பு, அனைத்து வணிக மற்றும் தொழிற்சாலை எல்பிஜி நுகர்வோரும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 5-ம் தேதியன்று 3,22,000 டன்களாக இருந்த இந்தியாவின் வாராந்திர எல்பிஜி இறக்குமதி, மார்ச் 19 அன்று முடிவடைந்த வாரத்தில் 265,000 டன்களாகக் குறைந்தது.
வருங்காலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பிற்கு மாறுவதற்குத் தயாராக உள்ளவர்கள் மற்றும் அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டின் கீழ் எரிவாயு வழங்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் நெருக்கடியைச் சமாளிக்க, வணிக நுகர்வோரை பாரம்பரிய எல்பிஜி சிலிண்டர்களிலிருந்து பிஎன்ஜி வலையமைப்பிற்கு விரைவாக மாற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்பதை இந்த முடிவு தெளிவாகக் காட்டுகிறது.