

ஒரு நூற்றாண்டு காலமாக, இந்தியாவில் நிலவி வந்த சொத்துரிமை சார்ந்த சட்ட சிக்கல்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. குறிப்பாக சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முன்னாள் பிரசிடென்சி நகரங்களில் சொத்து கொண்ட குடும்பங்களுக்கு, அதை பரிமாற்றம் செய்வது மிகப்பெரிய சட்டப் போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் அரசாங்கம் 1925ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒரு சட்டம்தான்.
அப்போது பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் புதிதாக இந்திய வாரிசுரிமை சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி ஒருவர் தனது சொத்துகளை , தனது வாரிசுகளுக்கு தர வேண்டி உயில் எழுதி வைத்திருந்தாலும், அந்த உயிலை நீதிமன்றம் மூலம் 'சான்றளிப்பு' (Probate) செய்வது கட்டாயமாக இருந்தது. இது இந்தியா முழுக்க நடைமுறையில் இல்லாவிட்டாலும், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இந்த பிரிட்டிஷ் கால நடைமுறையினால், ஒருவரின் சொத்துகளை அவரது உயிலில் உண்மையான வாரிசுதாரர்களுக்கு கொடுக்கப்படுவதாக இருந்தால் கூட, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தங்களை உண்மையான வாரிசுதாரர் என்பதை நிரூபிக்க வேண்டும் எந்த கட்டாயமும் இருந்தது.
குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து சார்ந்த எந்த பிரச்சனையும் புகாரும் இல்லாமல், சொத்துக்களை பங்கீடு செய்வதாக இருந்தாலும் கூட , நீதிமன்றத்தை அணுகி சொத்துக்களை உறுதி செய்வதற்கு பல ஆண்டுகாலம் ஆகிறது. இதனால் சொத்தின் உரிமைதாரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஏராளமான செலவுகளும் ஏற்படுகின்றன. இவை 3 பெரிய மாநகரங்களில் வசித்த மக்களுக்கு ஒரு சாபமாகவே இருந்தது.
அதிகப்படியான செலவு:
சொத்துரிமையை பெறுவதற்கு வழக்கறிஞர் செலவுகள் , நீதிமன்றக் கட்டணம் (Court Fees) போன்ற பொருளாதார சுமைகள் சாதாரண மக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் சொத்திற்கு உரிமை இருந்தும் கூட , வாரிசுகள் அடமானம் வைக்கவோ விற்கவோ முடியாமல் தவித்து வந்தனர்.
புதிய உயில் சட்டம்( டிசம்பர் 2025):
கடந்த வருட இறுதியில் மத்திய அரசு வாரிசுரிமை சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தம் செய்தது. அதன்படி இனி நீதிமன்றத்தில் 'கட்டாய உயில் சான்றளிப்பு' (Mandatory Probate) என்ற முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை, மும்பை, கொல்கத்தா உட்பட இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள சொத்துக்களுக்கும் உயில் சான்றளிப்பு கட்டாயமில்லை என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் , இந்த பெரு நகரங்கள் இனி டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையான சட்ட நிலையை பெற்றுள்ளது.
இனி இந்த நகரங்களில் சொத்துக்கள் எவ்வாறு மாற்றப்படும்?
புதிய சட்டத் திருத்தத்திற்குப் பின்னர், அசல் உயில் , உயில் எழுதியவரின் மரணச் சான்றிதழ் , வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டே அவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியும். தேவைப்படும் பட்சத்தில் மற்ற வாரிசுதாரர்களிடமிருந்து இருந்து தடையில்லா சான்றிதழ்(NOC) பெற வேண்டி இருக்கும்.
இந்த சட்டத் திருத்தம் சான்றளிப்பை தேவையில்லை என்று கூறியுள்ளதே தவிர , உயில் தேவையில்லை என்று கூறவில்லை. ஒருவேளை உயில் இல்லாவிட்டால் வாரிசுரிமைச் சட்டப்படி, சொத்துக்கள் அனைத்து வாரிசுகளுக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.