

தெற்கு மும்பையைச் சேர்ந்த 79 வயது மதிக்கத்தக்க பாட்டி சாயரா பீ தாஜுதீன் முல்லா, தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவர் எப்போதும் போலவே கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் பதற்றமடைந்து, பாட்டியைத் தேடத் தொடங்கினர்.
இந்நிலையில் பாட்டியின் பேரனின் புத்திசாலித்தனத்தால், டெக்னாலஜி உதவியுடன் ஒரே நாளில் அவரைக் கண்டுபிடித்து விட்டனர். நளசோப்பாராவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பாட்டி பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டி நடைபயிற்சிக்குச் சென்ற போது எதிர்பாரா விதமாக செவ்லி பகுதியில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் பாட்டி வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது தான் பாட்டியின் பேரனான முகமது வசீம் அயூப் முல்லாவிற்கு, அவரது கழுத்தில் இருந்த நெக்லஸ் நினைவுக்கு வந்தது. இது தங்க நெக்லஸ் மட்டுமல்ல; இதில் இருப்பிடத்தை துல்லியமாக காட்டும் ஜிபிஎஸ் கருவியும் உள்ளது. இந்தக் கருவியை அவரது பேரன் தான் பொருத்தியிருந்தார்.
உடனே அவர் ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்து, பாட்டியின் இருப்பிடத்தைக் கண்டறிய முயன்ற போது, பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் பாட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்ற பாட்டியின் உறவினர்கள், அவரது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தனர்.
பாட்டிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு உறவினர்கள் பாட்டியை தங்களுக்கு அருகாமையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றினர். பாட்டிக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.
தொழில்நுட்பத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கான சான்று தான் மும்பையில் நடந்திருக்கும் இந்த சம்பவம். பாட்டியின் பேரன் சாமர்த்தியமாக செயல்பட்டு பாட்டியை கண்டுபிடித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வயதானவர்களை பாதுகாக்க, அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு பொருளில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவது நல்ல பலன் தரும். சமீபத்தில் கூட பட்டன் போன்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த திட்டமிட்டு வருவதாக சில தனியார் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த போன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், அது மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.