

சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் ஓசூரில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதன் காரணமாக கடந்த 2024 ஜூன் மாதத்தில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை நியமிக்க ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டது தமிழக அரசு.
கடந்த ஆண்டே தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), இந்திய விமான நிலைய ஆணையம் வா0யிலாக ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டது. இதன்படி தேன்கனிக்கோட்டையில் உள்ள தோகரை அக்ரஹாரம் மற்றும் சூளகிரி தாலுகா ஆகிய இரண்டு இடங்கள் விமான நிலையம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தேர்வு செய்த இந்த 2 இடங்களில் உயரமான கட்டிடங்கள் எங்கு உள்ளன என்பதை ஆய்வுக்குழு ஆராய்ந்த பிறகு இறுதியாக சூளகிரி தாலுகா, விமான நிலையம் அமைக்க ஏற்புடையது என தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி தாலுகாவில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது.
சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து ஓசூர், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது. ஓசூரில் ஏற்கனவே வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் மின்சார வாகனம், பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் ஓசூரில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. மேலும் ஓசூர் நகரில் பிரம்மாண்டமான தொழில் கட்டமைப்பை உருவாக்க டாடா நிறுவனமும் முன்வந்துள்ளது.
இந்நிலையில் ஓசூரில் தயாரிக்கப்படும் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது. இங்கு விமான நிலையம் அமையும் பட்சத்தில், அது பெங்களூர் மற்றும் ஓசூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கு வர்த்தக ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க, ஆலோசகர்களை நியமிப்பிப்பதற்கு ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனைகளைக்கு ஏற்ப விமான நிலையத்தைக் கட்டமைக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
திட்ட அறிக்கை தயாரானதும், இதனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்து, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலைய கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.