
சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி விட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தியாவில் தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், 4 அடுக்குகளில் இருந்து 2 அடுக்காக அதாவது, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், சமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை அதிரடியாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன் தங்களது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதி மந்திரிகளும் பங்கேற்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (செப்டம்பர் 3-தேதி), நாளையும் (செப்டம்பர் 4-தேதி) நடைபெற உள்ளது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரிகுறைப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு 5 சதவீதம் மட்டும் ஜிஎஸ்டி விதிக்க இக்கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றும் தெரிகிறது.
சமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நெய், தின்பண்டங்கள், குடிநீர், சிலவகை காலணிகள், பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரிவிதிப்பு 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீதத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிது.
சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ் போன்ற பொருட்களின் விலை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைய வாய்ப்புள்ளதால் அவற்றின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைந்த சிறிய வகை கார்கள் 18 சதவீத ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படும் என்றும், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
அதேநேரத்தில் புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் அதிகளவில் அதாவது 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அவற்றின் விலை உயரும் என தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதைப்பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.