
அமெரிக்காவில் வேலை செய்வதை வெளிநாட்டு இளைஞர்களும், தொழில்துறை வல்லுநர்களும் அதிகம் விரும்புவர். குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவரை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த H-1B விசா தொடங்கப்பட்டது. இதன்மூலம் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லாத துறைகளில் வெளிநாட்டினரை பணியமர்த்த முடியும் என அமெரிக்கா கூறுகிறது.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு H-1B விசா கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இதன்படி இனி H-1B விசாவைப் பெற $100,000 கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்தைக் கட்ட வேண்டும். இதனால் வெளிநாட்டவரை அமெரிக்காவில் பணியமர்த்தும் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஏனெனில் H-1B விசா கட்டணத்தை நிறுவனங்கள் தான் ஸ்பான்சர் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இனி வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவது குறைந்து விடும் எனத் தெரிகிறது. அப்படியே நிறுவனங்கள் வெளிநாட்டவரைப் பணியமர்த்த விரும்பினால், அவரது தகுதியும், திறமையும் உச்சபட்ச அளவில் இருக்க வேண்டும். இதனால் புதிதாக பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டு இளைஞர்களுக்கு அமெரிக்காவில் பண்யாற்றும் வாய்ப்பு குறைந்து விடும்.
அமெரிக்க பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் H-1B விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. இதற்கு முன்பு வரை H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க $215 (ரூ.19,000) கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. H-1B விசா படிவத்தை நிரப்புவதற்கு $780 (ரூ.68,000) கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்பட்ட இந்தக் கட்டணம் தற்போது இலட்சக்கணக்கிற்கு மாறியிருப்பது வெளிநாட்டு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் அதிகளவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அதிக செலவு செய்து வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் பணியமர்த்த நிறுவனங்கள் தயாராக இருக்காது. தேவைப்படும் பட்சத்தில் அதிக திறமை வாய்ந்த வெளிநாட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டாடா, விப்ரோ, அமேசான், ஆப்பிள், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், கூகிள், ஹெச்சிஎல், ஐபிஎம் மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் பணியமர்த்துகின்றன. இந்நிலையில் H-1B விசாவின் கட்டண உயர்வு வெளிநாட்டவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்யும். இதனால் அமெரிக்கா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெருகும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க வெள்ளை மாளிகை ஊழியரான வில் ஷார்ஃப் விசா கட்டண உயர்வு குறித்து கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக H -1B விசா திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் தான் தற்போது கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் இல்லாத துறைகளில் மட்டுமே சிறப்பு வல்லுநர்களைப் பணியமர்த்த H -1B விசா திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் எண்ணற்ற வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிவதால், உள்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. இனி இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும்” எனத் தெரிவித்தார்.