

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.)தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணி சிறப்பாக நடைபெறுவதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் சுமார் 77 ஆயிரம் அரசு பணியாளர்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாக நியமித்துள்ளது.
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.இதில் அவர்கள் ஏராளமான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.பொது மக்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களால் வாக்களிக்க முடியுமா?என்ற ஐயத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.குறிப்பாக இடம் விட்டு இடம் மாறியுள்ள வாக்காளர்களிடையே இது குறித்த கவலை அதிகமாக உள்ளது.மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக தொடர்ந்து வாக்காளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு தீர்வு காணவும் வாக்காளர்கள் மற்றும் அவரது உறவினர்களின் பெயர்கள் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்ற விவரத்தை கண்டறிய வசதியாகவும் வாக்காளர்கள் உதவி மையங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் குறித்த தனது சந்தேகங்களுக்கு பொது மக்கள் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 9444123456 என்ற உதவி எண்ணிலும் whatsapp மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உதவி எண்கள் 24 மணிநேரமும் செயல்படும் எனவும் கூறப்படுகிறது.