

நாம் கடையில் பொருள் வாங்கும் போது அல்லது சிலரிடம் இருந்த பணம் பெறும் போது சில நேரம் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் நமக்கு கிடைக்கும். அந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருப்போம். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது,
அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் கிழிந்த, அழுக்கடைந்த, சிறிய அளவில் தீயில் எரிந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
எனவே அருகில் உள்ள வங்கிக்கு சென்று உங்களிடம் உள்ள கிழிந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை எந்தவொரு வங்கி கிளைகளிலும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.
மேலும் உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களின் சேதத்தின் அளவுக்கு ஏற்ப முழு மதிப்பு அல்லது பாதி மதிப்பு வழங்கப்படும். அதாவது, ரூபாய் நோட்டில் சேதம் அதிகமாக இருந்தால், அதிக அளவில் தீயில் எரிந்தோ அல்லது குறிப்பிடத்தக்க பகுதிகள் காணாமல் போயிருந்தால் அதற்கு குறைந்த அளவே தொகை கிடைக்கும்.
இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்து கொள்ளலாம்.
பணமற்று மற்றும் சேமிப்பு வசதி இல்லாத வங்கிகளில் (non-chest banks) 30 நாட்களில் மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பணம் சேமிப்பு மற்றும் மாற்று வசதிகள் இல்லாத வங்கிகளில் (non-chest banks) கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால், அவற்றை அந்த வங்கியில் டெபாசிட் செய்து ஒரு ரசீதை பெற்று கொள்ள வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் ரசீதைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் மிக மோசமாக சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு, குறிப்பாக எரிந்த அல்லது ஒன்றாக சிக்கியிருக்கும் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அலுவலத்துக்குச் செல்வது சிறந்தது.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை (கிழிந்த நோட்டுகள்) மாற்றும்போது சில வரம்புகள் உள்ளன. உங்களிடம் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த மொத்த பணத்தையும் கொண்டு சென்று ஒரே நாளில் மாற்றி கொள்ளலாம் என்று நினைத்தால் அது முடியாது.
ரிவர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு கிழிந்த அல்லது சேதமடைந்த 20 எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுக்களை மட்டும் தான் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.
அப்படியில்லையெனில் ரூ.5000 வரையிலான மதிப்புடைய கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் தான் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதேசமயம் உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அல்லது மொத்த மதிப்பு ரூ.5000-க்கும் அதிகமாக இருந்தால், வங்கி கூடுதல் ஆவணங்களைக் கோரலாம்.
மாற்ற முடியாத ரூபாய் நோட்டுக்கள்:
சில சூழ்நிலைகளில் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்ற முடியாது. மடிந்து நொறுங்கி போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்று கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், சட்டப்படி பறிமுதல் செய்ய கூடிய நோட்டுக்கள் ஆகியவற்றை வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது.
மோசமாக எரிந்த அல்லது ஒன்றாக ஒட்டிக்கொண்ட ரூபாய் நோட்டுகள் போன்ற மிகவும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ளாது.
வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ கருதப்பட்டால் அத்தகையை ரூபாய் நோட்டுக்களை வாங்கிகள் மாற்றித்தரவோ அல்லது டெபாசிட்டாக ஏற்கவோ மறுக்கலாம்.
அதேபோல் ஒரு வங்கி வாடிக்கையாளிடம் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டை ஒரு சரியான காரணமின்றி மாற்ற மறுத்தால் நீங்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம்.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், ரூபாய் நோட்டுக்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அடுத்தாண்டு தொடக்கத்தில் (2027 ஏப்ரல்)அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.