

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் களத்தில், அவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்? என்று இன்றுவரை விடை தெரியாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் ஓ.பன்னீர்செல்வம் முதன்மையானவர். 3 முறை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அலங்கரித்த , அவரது அரசியல் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது.
அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து ,தற்போது தொகுதி பங்கீடு பற்றிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திமுகவும் தற்போது தொகுதி பங்கீடு வேலையில் மும்முரமாக இருக்கிறது. பாஜகவினர் ஓபிஎஸ்ஐ தங்கள் அணியில் சேர்த்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், என்று கடுமையான முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால், பன்னீர்செல்வத்தை கட்சியில் மட்டுமல்லாமல் கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை , ஓபிஎஸ் தனியாக சென்று சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ஓபிஎஸ் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. ஆனாலும் இன்று வரை அவர் திமுகவில் இணையவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று, ஓ. பன்னீர்செல்வம் தேனியில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் "எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவில் என்னை இணைத்து இரட்டை தலைமை கொண்டு வந்தார். என்னை தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க கூறி வற்புறுத்தியதும், நானும் இணைந்து கையெழுத்து போட்டால் தான் அது செல்லுபடியாகும் என்று விதிகளைக் கொண்டு வந்ததும் அவர் தான்". அதன்படி நானும் பதவியில் இருக்கும் வரை, அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன்.
பின்னர் பிரிந்து மீண்டும் இணையும் போது , பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் நான் துணை முதல்வர் பதவியினை ஏற்றுக் கொண்டேன். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் , முன்பு பிரிந்து கிடந்த அதிமுகவை ஒன்றிணைத்து ஆட்சியைப் பிடித்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. தற்போது அதிமுக கடுமையான வீழ்ச்சியில் உள்ளது.
நான் எப்போதும் கட்சிக்கு துரோகம் செய்தது கிடையாது. ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது, எனக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அவர் மறைந்த பின்னர் முதல்வர் பதவி மீண்டும் எனக்கு வந்த போது, நான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். என்னை வற்புறுத்தி தான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். பின்னர் துணை முதல்வர் பதவியை வேண்டாம் என்று தவிர்த்தேன். பிரதமர் மோடி கூறியதால் தான் நான் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
என்னை தொடர்ச்சியாக கட்சியில் அவமதித்தாலும் தாங்கிக் கொண்டேன். பொதுச்செயலாளர் தொடர்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த விதிகள் அனைத்தையும் மாற்றி விட்டார்கள். பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் விதியினை யாராலும் மாற்ற முடியாது, என்பதையும் மாற்றிவிட்டார்கள். கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர் எழுதிய விதிகளை மாற்ற நீங்கள் யார்? இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கக் கூடாதா? என்னை அரசியல் துறவறம் மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
நான் அதிமுக வேட்டி கட்ட கூடாது என்று நீதிமன்றம் செல்கிறார்கள். நான் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வராக இருந்துள்ளேன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளேன். "நான் செய்த தவறை மட்டும் சொல்லுங்க, நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்" என்று ஓபிஎஸ் கூறினார்.