
இந்திய ரெயில்வே என்பது உலகளவில் அதிக பயணிகளை கையாளும் ஒரு அமைப்பு ஆகும். இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களை பயன்படுத்துகின்றனர். குறைந்த கட்டணம், கால விரயம் தவிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் மக்களின் மிகச்சிறந்த தேர்வாக ரெயில்கள் உள்ளன.
தமிழகத்தை பொறுந்தவரை வேலைக்கு செல்லவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் அதிகளவு மக்கள் புறநகர் இரயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்களை விட, மின்சார ரயில் டிக்கெட்டுகள் மலிவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை போன்ற நகரங்களில் தினசரி பயன்பாட்டுக்கு இதுவே முக்கிய போக்குவரத்து முறையாகும். அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு உதவும் ரெயில் சேவையில் சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும்,மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெற்கு ரெயில்வே கண்டித்துள்ளது.
அந்தவகையில் ரெயில் பயணத்தில் போது சிலர் அநாகரிகமான செயல்களை செய்வதும், பயணிகளுக்கும், ரெயிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடந்த வண்ணம் தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே, புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்கள் தவிர்க்கவும், நாகரிகத்தையும், தூய்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், புறநகர் ரயில்களில் பயணிகளால் ஏற்படும் சில ஒழுங்கீனமான செயல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
* ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே இருக்கைகள் காலியாக இருந்தால் அதன் மீது தங்கள் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசௌகரியத்தையும் மற்றும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
* ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.
* ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
* ரெயில் நிலையங்களில் ரெயில் முழுமையாக நிற்பதற்கு முன்பே, இருக்கைகளைப் பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடியவும் அதிக சாத்தியமுள்ளது.
இதுபோன்ற அநாகரியமான செயல்களில் ஈடுபடும் பயணிகளின் செயல்கள், நெரிசல் மிகுந்த நேரங்களில் சக பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதால், ரெயிலில் பயணம் செய்பவர்கள் பின்வரும் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது:
ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதுபோல், ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி,
ரெயிலில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற நோக்கத்தில் கற்கள் அல்லது பிற பொருட்களை ரெயிலின் மீது/மேல் எறிதல், அல்லது தண்டவாளங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சம்பவங்களுக்கு பிரிவு 150ன் கீழ் தீங்கிழைக்கும் வகையில் ஒரு ரயிலை சேதப்படுத்துதல் அல்லது சேதப்படுத்த முயற்சித்தல் அடிப்படையில், குற்றம் செய்வபர்களுக்கு, ஆயுள் தண்டனை, அல்லது 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், முதல் குற்றமாக இருந்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், அடுத்தடுத்த குற்றமாக இருந்தால் சிறப்பு காரணங்கள் இல்லாத நிலையில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேபோல், ரெயில் பெட்டிகளில் கற்களை வீசுவது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட செய்யும் குற்றச்செயல்களுக்கு பிரிவு 152ன் கீழ் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நேரடி காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், ரெயில்வேயில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், பிரிவு 153 – வேண்டுமென்றே செய்த செயல் அல்லது தவறுதல் மூலம் ரெயில் பயணத்தில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவின் கீழ், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படும்.
பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவசரமாகவோ அல்லது அலட்சியமாகவோ செய்யப்படும் செயல்களுக்கு(வேண்டுமென்றே செய்யப்பட வேண்டிய அவசியமில்லை), பிரிவு 154 - பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் திடீர் அல்லது அலட்சியமான செயல்கள்/தவறுதல்கள் சட்டப்பிரிவின் கீழ், 1 வருடம் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே ரெயிலில் பயணம் செய்பவர்கள் இனிமேல் மற்ற பயணிகளுக்கு தெந்தரவு ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.