

நாட்டில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் ரயில் பயணத்தையே பொதுமக்கள் நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தைக் கொடுப்பதால், ரயில் போக்குவரத்து நடுத்தர மக்கள் மத்தியில் இன்று வரையிலும் முதல் இடத்தில் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும் எடுத்த டிக்கெட்டை பயணிகள் தொலைத்து விட்டால், என்ன செய்வது இன்று பலருக்கும் தெரியாது.
ஆனால் டிக்கெட்டை தொலைத்த பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்வே துறையில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை பயணிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும். பயணத்திற்கு முன்போ அல்லது பயணத்தின் போதோ டிக்கெட்டை தொலைத்து விட்டால், முதலில் நீங்கள் பதற்றத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்களால் நகல் டிக்கெட்டை எளிதாக பெறுவதற்கு, ரயில்வே விதிகள் உதவுகின்றன.
நீங்கள் பயணத்திற்கான ரயில் டிக்கெட்டை எந்த முறையில் எடுத்தீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தற்போது ஆன்லைனில் இ-டிக்கெட் எடுக்கும் வசதி இருப்பதால், பலரும் ஆன்லைன் முறையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கின்றனர்.
டிக்கெட் கவுண்டரில் நீங்கள் டிக்கெட் எடுத்து பயணத்திற்கு முன்பாக அது தொலைந்து விட்டால், உடனடியாக தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏசி கோச் என்றால் ரூ.100 கட்டணமும், ஸ்லீப்பர் கோச் என்றால் ரூ.50 கட்டணமும் செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு நகல் டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் உங்கள் பயணம் முடியும் வரை செல்லுபடியாகும்.
ரயிலில் ஏறிய பிறகு நீங்கள் டிக்கெட்டை தொலைத்து விட்டால், உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அணுகி விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு இ-டிக்கெட், ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான ஆதாரம் அல்லது PNR நம்பர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை டிக்கெட் பரிசோதகரிடம் சமர்ப்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை டிக்கெட் குறித்த எவ்வித ஆதாரமும் உங்களிடம் இல்லையென்றால், முன்பதிவு செய்தவர்களின் பட்டியல் நிச்சயமாக டிக்கெட் பரிசோதகரிடம் இருக்கும். ஆகையால் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து நீங்கள் தான் என்பதை உறுதி செய்தாலே போதும். உங்கள் அடையாளத்தை நிரூபிக்க தவறும் பட்சத்தில், டிக்கெட் கட்டணம் மற்றும் அபராத தொகையை செலுத்தி நீங்கள் அதே ரயிலில் பயணிக்கலாம்.
பயணத்தின் போது ரயில் பயணிகள் டிக்கெட்டை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. மேலும் இ-டிக்கெட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். கவுண்டரில் டிக்கெட்டை பெற்றிருந்தால், டிக்கெட் உடன் அடையாள அட்டையையும் மறக்காமல் எடுத்துச் செல்வது சிரமங்களைத் தவிர்க்க உதவும்.
பாதுகாப்பான மற்றும் மன அழுத்தம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள, பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே துறை செய்து வருகிறது. ரயில்வேயின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டாலே போதும்; நம்முடைய பயணம் எளிதாகி விடும்.