

தமிழகத்தின் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம்தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் திமுக மகளிர் வாக்குகளை கைப்பற்றும் நோக்கில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் மகளிர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஸ்டாலின் அறிவித்த இல்லத்தரசி ரூ 8000 கூப்பன் திட்டமாகும்.
அதாவது வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.
இந்த கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன், மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கி கொள்ளலாம். அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானவரித்துறை கட்டாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த கூப்பன் கொடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் எனும் போது ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ.33,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்பதுதான். இந்த வாக்குறுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்களோ அதனடிப்படையில் ரூ.8000 கூப்பன் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை வாங்காத பெண்களுக்கும் இந்த கூப்பன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் போதுதான் இதன் விதிமுறைகள் முழுமையாக தெரியவரும்.
ஏனெனில் கடந்த தேர்தலில் ரூ.1 லட்சம் அல்லது 5 சவரன் நகைக்கு ஈடாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பலவிதமான கணக்குகளை காரணம் காட்டி பெரும்பாலான மக்களின் கடனை தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றியது. அதுபோல் இந்த அறிவிப்பும் இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.