

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு காலாண்டில் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சிப் பாதையைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார்.
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் என்றும் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் போர் உள்ளிட்ட உலக சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போரால் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளதாகவும் உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்வதாகவும் தெரிகிறது.
இந்த சூழலில்தான் நடப்பு நிதியாண்டின் (2026-27) முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதம் 7.8% அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது . இது முந்தைய காலாண்டின் 8.6 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் 7 சதவீத கணிப்பை தாண்டி உள்ளதாகவும் போர் உள்ளிட்ட வெளிப்புற தாக்கங்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகம் நிலைத்திருப்பதை காட்டுவதாகவும் அரசு கூறி உள்ளது.
இந்நிலையில் உலகளாவிய சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியா அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களுக்குப் பாராட்டுக்களுடன் முக்கிய வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார்.
அதில் "2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இது அபார வளர்ச்சி ஆகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
உலக விநியோக சங்கிலியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த சவால்களை தாண்டி இந்திய மக்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த அபார வளர்ச்சிக்கு இந்திய மக்களின் கூட்டு முயற்சியும், கடின உழைப்புமே காரணம்" என அவர் வாழ்த்தியுள்ளார்.
குறிப்பாக மக்களை அவசியமின்றி தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஏனெனில் இந்தியா அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால் நாட்டின் டாலர் இருப்பு (Forex Reserves) வெளியேறுகிறது என்றும் இதைத் தவிர்க்க, அவசியமில்லாத பட்சத்தில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஆடம்பரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் 'டெஸ்டினேஷன் வெடிங்' (Destination Weddings) முறையைத் தவிர்த்து, இந்தியாவிற்குள்ளேயே திருமணங்களை (Wed in India)நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். மக்கள் வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டு சுதேசி தயாரிப்புகளையும், 'மேக் இன் இந்தியா' (Make in India) பொருட்களையும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
அத்துடன் பொழுதுபோக்கிற்காக இந்திய மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைக் குறைத்து, உள்நாட்டு சுற்றுலாக்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
'பொருளாதார வளர்ச்சி குறைந்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஊதியம் குறையும். நாடு முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்படும். தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்திருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்'. என இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் பதிவு செய்தார்.
முக்கிய நோக்கமாக " நாம் எவ்வளவு தூரம் சுதேசி மற்றும் தற்சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு வேகமாக இந்தியா வளர்ச்சியடையும். நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது (2047), இன்றைய இளைஞர்களிடம் ஒரு 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' (Viksit Bharat) ஒப்படைப்பதே நமது இலக்கு" என்று பிரதமர் மோடி இந்த உரையில் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் கூற்றுப்படி உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவும் இந்த சூழலிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.