

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இனிமேல் நீங்கள் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை சற்றும் நிறுத்தாமல், மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே கட்டணத்தை வசூலிக்கும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் உள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் வரஉள்ளது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் வாகனங்கள் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பதிவு எண்ணை அடையாளம் கண்டுபிடிக்கும்.
இந்தியாவில் 1,46,560 கிலோ மீட்டர் நீளம் உள்ள நெடுஞ்சாலையில், சுமார் 1,150 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கரை சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்ட கருவி ஸ்கேன் செய்த பின்னர் அந்த பாதையில் உள்ள தடுப்பு தானாகவே விலகும்.
இதையடுத்து வாகனம் அங்கிருந்து செல்லும். இதேபோல் சுங்கச்சாவடிகயில் வாகன ஓட்டிகள் கட்டணமும் செலுத்தலாம். பாஸ்டேக் ஸ்கேன் செய்வதிலும், சுங்க கட்டணம் பெறுவதிலும் தாமதம் ஆவதால் வாகனங்கள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசல், எரிபொருளும் கூடுதலாக செலவாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெருஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள், ரேடியோ அதிர்வெண் அடையாள கருவி ஆகியவற்றோடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் மென்பொருளும் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்கும் அதே வினாடியில், தானியங்கி முறையில் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டுவிடும்.
இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்து நிற்க வேண்டிய தேவை ஏற்படாது. சுங்கச்சாவடியை வாகனங்கள் 100 கி.மீ. மற்றும் அதற்கு மேலான வேகத்தில் கடந்து சென்றாலும் அதன் பதிவு எண்ணை துல்லியமாக நவீன கேமராக்கம் அடையாளம் கண்டுபிடித்து சுங்கக்கட்டணம் வசூலிக்க உதவி செய்யும்.
இதற்காக சீனா, தைவான், தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட ஏதாவது ஒரு நாட்டில் இருந்து நவீன கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படிப்பட்ட கேமரா இருந்தால், ரீடிங் பிரச்சனை இருக்காது. வேகத்தை குறைக்க வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த அதிநவீனத் திட்டத்தினால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும், இதனால் பயண நேரம் கணிசமாக குறையும். குறிப்பாகப் பண்டிகை காலங்களில் ஏற்படும் நீண்ட வாகன வரிசைகள் இனி வரும் காலங்களில் இருக்காது.
அதுமட்டுமின்றி மனிதத் தலையீடு குறைவதால், கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் குளறுபடிகள் தவிர்க்கப்படுவதுடன், ஜி.பி.எஸ் மற்றும் ஏஐ மூலம் துல்லியமான கணக்கீடு நடைபெறும் என்பதால் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதுடன் செலவும் குறைந்துவிடும்.