ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இந்திய அஞ்சல் துறையின் (India Post)கொரியர் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் விடுமுறை தினங்களிலும் 24 மணி நேர ஸ்பீடு போஸ்ட் (Speed Post) சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவசர ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தாமதமின்றி அனுப்பவும், பெறவும் இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய அஞ்சல் துறை (India Post) உலகின் மிகப்பெரிய தபால் வலைப்பின்னலாகும். இது கடிதங்கள், பார்சல்கள் அனுப்புவது மட்டுமன்றி, சேமிப்புத் திட்டங்கள், வங்கி சேவைகள், மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் (PLI) போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் ஸ்பீடு போஸ்ட் (Speed Post) என்பது ஒரு அதிவேக அஞ்சல் சேவையாகும், இது நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பார்சல்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்ப உதவும் ஒரு முதன்மையான விரைவு அஞ்சல் சேவையாகும். உள்ளூர் மற்றும் மெட்ரோ நகரங்களில் 1-2 நாட்களிலும், பிற மாநிலங்களுக்கு 2-5 நாட்களிலும் ஆவணங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.
குறிப்பாக சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் பிரீமியம் சேவைகளும் உள்ளன. இத்தகைய ஸ்பீடு போஸ்ட்டுகளுக்கு குறைந்தபட்சமாக 50 கிராம் வரை உள்ள தபால்களுக்கு ரூ.15 முதல் ரூ.35 வரை (இடத்தைப் பொறுத்து) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 35 கிலோ வரையிலான பார்சல்களை ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்ப முடியும். மேலும் அஞ்சல் துறையின் மொபைல் செயலி (India Post App) மூலம் முன்பதிவு செய்து, தபால்காரர் மூலம் உங்கள் வீட்டிலிருந்தபடியே பார்சல்களை பிக்-அப் (Pick-up) செய்யக் கோறும் வசதியும் உள்ளது.
தபால் பாதுகாப்பாகச் சென்று சேர ஒன்-டைம் பாஸ்வேர்ட் (OTP) முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் நிகழ்நேர (Real-time) கண்காணிப்பு வசதியும் உண்டு. 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படாவிட்டால், முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை புதிய முயற்சியாக, சென்னை மற்றும் பிற முக்கிய மெட்ரோ நகரங்களில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஸ்பீடு போஸ்ட் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கொரியர் சேவை மற்றும் 24 மணி நேர ஸ்பீட் போஸ்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய விடுமுறை நாட்களைத் தவிர, மற்ற அனைத்து ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் பார்சல்கள் மற்றும் தபால்கள் விநியோகம் செய்யப்படும். குறிப்பாக, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களுக்கு இடையே அடுத்த நாள் (D+1) டெலிவரி உறுதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் முக்கிய ஆவணங்கள், மருத்துவப் பொருட்கள், வணிக ஆவணங்கள் மற்றும் அவசர பார்சல்களை தாமதமின்றி அனுப்பவும், பெறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் மையங்களில் 24 மணி நேரமும் ஸ்பீட் போஸ்ட் சேவை வழங்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக அனைத்து அஞ்சலகங்களிலும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இந்த குறிப்பிட்ட மையங்களில் பகல், இரவு என எந்த நேரத்திலும் தங்களின் அஞ்சல் மற்றும் பார்சல்களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர தேவைகளுக்கான அஞ்சல் சேவைகள் மேலும் விரைவாக கிடைக்கும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை அண்ணா நகரில் வாகனப் பிரச்சாரத்தை இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம், பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இரண்டாம் கட்டமாக பிற மற்றும் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.