

தபால் கட்டணம் வரும் ஆகஸ்ட் 1-ம்தேதியில் இருந்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 24 மணி, 48 மணி நேர விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை (India Post) என்பது கடித பரிமாற்றம், சேமிப்பு கணக்குகள் மற்றும் விரைவு தபால் வழங்கும் உலகின் மிகப்பெரிய வலையமைப்பாகும். இது நாடு முழுவதும் லட்சக்கணக்கான அலுவலகங்கள் மூலம் மக்களுக்கு சேவை செய்கிறது. 164999 தபால் நிலையங்கள் நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்கின்றன. பெரிய நகரங்கள் முதல் தொலைதூர கிராமங்கள் வரை ஒவ்வொரு இந்தியரையும் இணைப்பதே எங்கள் குறிக்கோள்.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
மேலும், முதல் முறையாக எது 'ஆவணம்' மற்றும் எது 'பார்சல்' என்பதற்கான தெளிவான வரையறைகளையும் அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.
இந்த புதிய கட்டண நடைமுறை வருகிற ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகளின படி, எவ்வித மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள் அல்லது வணிக மதிப்பும் இல்லாத பொருட்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 'ஆவணங்கள்' என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படலாம்.
வணிகப்பெருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுப்பும் வெல்கம் கிட்கள், பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, வங்கி அறிக்கை நகல்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், அரசு வழங்கிய அடையாள ஆவணங்களான பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் ‘ஆவணம்’ பிரிவில் இடம்பெறும்.
அதேபோல் 500 கிராம் வரை எடையுள்ள வர்த்தக நோக்கமற்ற ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களுக்கு இந்த பிரிவில் சேர்க்கப்படும்.
அதேவேளையில், இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களும் அதாவது, விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்கள் அல்லது வணிக மதிப்புடைய பொருட்கள் அனைத்தும் இனி 'பார்சல்' பிரிவின் கீழ் மட்டுமே கையாளப்படும்.
பொதுமக்கள் மற்றம் மொத்த வாடிக்கையாளர்களுக்காக ‘24 விரைவு தபால்’ மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். ‘48 விரைவு தபால்’ மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
24 மணி நேர விரைவு தபால் சேவையில் பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடைக் மற்றும் தூரத்திற்கேற்ப குறைந்தபட்சம் ரூ.28 முதல் அதிகபட்சம் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38ம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94ம் (+ ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும்.
மொத்தமாக அனுப்புபவர்கள்: ஒப்பந்த அடிப்படையில் அதிக அளவில் ஆவணங்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு 24 மணி நேர சேவைக்கு ரூ. 38 முதல் ரூ. 100 வரையிலும், 48 மணி நேர சேவைக்கு ரூ. 48 முதல் ரூ. 72 வரையிலும் தனிச் சலுகைக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான ஸ்பீட் போஸ்ட் கட்டணத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
இதுவரை ஆவணங்களுக்கும் பார்சல்களுக்கும் இடையே தெளிவான வரையறை இல்லாததால், தபால் நிலையங்களில் கவுன்ட்டர்களில் குழப்பம் நிலவி வந்தது. பல நேரங்களில் ஆவணங்களை அனுப்புவதற்கும் வாடிக்கையாளர்கள் பார்சல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது.
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த முறையான வகைப்பாடு மூலம், கட்டண முறை வெளிப்படையாக்கப்பட்டு, வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தினசரி பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அனுப்பும் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பலன் கிடைக்கும்.
இந்த புதிய நடைமுறையால் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக வகைப்படுத்தி அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி கிடைக்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.
உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை கண்டறிய Official Post Office Locator தளத்தைப் பயன்படுத்தலாம்.