

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் முயற்சியாக, 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு நாடு தழுவிய எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க இருக்கிறது. இதன்படி கார்டசில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், வரும் வாரங்களில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. பெண்களை பாதிக்கும் பொதுவான புற்று நோய்களில் ஒன்றான இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இந்த எச்.வி.பி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். ஒரு முறை செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, எச்விபி வகைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
கார்டசில்(Gardasil 9) என்பது மனித பாாப்பிலோமா வைரஸ் தொற்றால் ஏற்படும் கர்ப்பப்பை வாய், பிறப்புறுப்பு மற்றும் தொண்டைப் புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்களைத் தடுக்கும் ஒரு தடுப்பூசியாகும். இது 9 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. பக்க விளைவாக ஊசி போடப்பட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் லேசான காய்ச்சல் இருக்கலாம். இது புற்றுநோய்க்கான சிகிச்சை அல்ல; தடுப்பு நடவடிக்கையாகும்.
உலகளவில் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுக்கக்கூடிய ஒரே புற்றுநோய் இந்த கருப்பை வாய் புற்றுநோய் மட்டும்தான். இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே, இளம் வயதிலேயே தடுப்பூசி போடுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இந்த ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கி வரும் வாரங்களில் நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளது.
உலகின் 160 நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தில் தற்போது இந்தியாவும் இணைகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகளுடைய ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் காக்கும் பொருட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் இந்த புரட்சிகரமான தடுப்பூசி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது என்பது பாராட்டுதலுக்குரியது.
தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் விலையாக இருக்கும் இந்த தடுப்பூசி, தமிழக அரசின் இலவச திட்டம் மூலம் அனைத்து தரப்பு பெண் குழந்தைகளும் எளிதில் அடையக் கூடியதாகவும், எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலும் உள்ளது. இப்பொழுது மத்திய அரசும் இலவசமாக இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வந்துள்ளதால் இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெண்கள் இந்த உயிருக்கு ஆபத்தான நோயிலிருந்து விடுபடுவார்கள்.