வட மாநிலங்களை வாட்டியெடுக்கும் கடும்குளிர்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட மாநிலங்களை வாட்டியெடுக்கும் கடும்குளிர்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்கள் என்றாலே எப்போதுமே கடும்குளிர் வாட்டியெடுக்கும் . எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவும். இதனால் பெரும் வாகன விபத்துக்கள் கூட நிகழ்வது உண்டு. எனவே கடும் குளிர் குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களின் கடந்த சில வாரங்களாகவே குளிர் உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பதிப்பிற்குள்ளாகி உள்ளது. பல இடங்களிலும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்களும், தாமதமாக கிளம்பி செல்கின்றன.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை வேளைகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன.

கடந்த வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விமானங்களும், தினசரி 500க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் குளிர் காலத்தின் தாக்கத்தால் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

கடுங்குளிர் வீசும் காலை வேளையில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த குளிர் அலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 18 ஆம் தேதி வரை கடும்குளிர் வீசும்.

வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில இடங்களில் 2 டிகிரி கீழ் வெப்ப நிலை குறையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குளிர் பூஜ்ஜியத்திற்கு கீழ் மைனஸ் டிகிரிக்கு செல்லும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 6 பேர் மராடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், குளிர் பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் இயங்கும் நேரம் அங்கு மாற்றப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com