

இந்திய நாட்டின் உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் நான்கு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பெண்கள் பொறுப்பேற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் மொத்தமுள்ள நீதிபதிகளில் பெண்கள் 14.85% மட்டுமே உள்ள நிலையில், இந்த முக்கிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நம் நாட்டின் உயர் நீதிமன்றங்களில் 781 நீதிபதிகள் உள்ளனர். அதில் 116 பேர் (14.85%) பெண் நீதிபதிகள். இந்த 116 பெண் நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் ஒரே நேரத்தில் தலைமை நீதிபதிகளாக பதவி வகிப்பதன் மூலம் இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
நீதிபதி மீனாட்சி மதன்ராய்:
சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து வந்த மீனாட்சி மதன்ராய் கடந்த 5ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
நீதிபதி சுனிதா அகர்வால்:
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஜூலை 23, 2023 முதல் இவர் இப்பதவியில் நீடித்து வருகிறார்.
நீதிபதி ரேவதி மோஹிதே தேரே:
மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்பு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஜனவரி 10ஆம் தேதி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி லிசா கில்:
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று, ஏப்ரல் 25ஆம் தேதி பொறுப்பேற்றார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு இதேபோல் நான்கு பெண் நீதிபதிகள் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் மட்டுமே முழுநேரத் தலைமை நீதிபதியாக இருந்தார்.
அதாவது 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜியும், மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா செல்லூரும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரோகினியும் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த நிலையில், பெண் நீதிபதியான நிஷிதா நிர்மல் மத்ரே மட்டும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். ஆனால் தற்பொழுது நால்வரும் முழுநேரத் தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் முந்தைய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை உயர் நீதிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதிலும், பாலின சமத்துவத்தை நோக்கிய நீதித்துறையின் பயணத்திலும் ஒரு முக்கிய படிக்கட்டாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இதுவரை 21 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதியாக பணியாற்றி உளளனர். அதில் 2013ஆம் ஆண்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர். பானுமதி பணியாற்றிய நிலையில், அவர் பதவி உயர்வு மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.