

இந்திய ரயில்வேயில் சுமார் 30,000 பணியிடங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போதைய பேசுபொருளாகி உள்ளது. பணியிடங்கள் குறைந்தால் பணியாளர்கள் நிலை என்ன என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது குறித்த முக்கிய தகவல்களை ஆராய்ந்தபோது ரயில்வே நிர்வாகம் நேரடியாக 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவில்லை. மாறாக ஏற்கனவே காலியாக உள்ள 29,608 இடங்களை நிரந்தரமாக நீக்க அல்லது இடமாற்றம் செய்ய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தானியங்கிமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, ஆட்கள் உதவி தேவைப்படாத சமையல் பணி, புக் பைண்டர் போன்ற காலிப் பணியிடங்கள் இந்த முடிவின் கீழ் குறைக்கப்பட உள்ளது.
இந்திய ரயில்வேயின் இது போன்ற மொத்தமுள்ள 14.80 லட்சம் பணியிடங்களில், சுமார் 2% பணியிடங்களை 'ஒப்படைக்க' (Surrender) அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், தெற்கு ரயில்வேயில் மட்டும் சுமார் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 4 லட்சம் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில் ரயில்வே எடுக்கும் இத்தகைய நடவடிக்கை ரயில்வே பாதுகாப்பு மற்றும் ரெகுலர் இயக்கத்தைப் பாதிக்கும் என ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இது ஒரு வழக்கமான நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கை எனவும் 30.000 ஊழியர்கள் பணி நீக்கம் என்று பரவி வரும் தகவல்கள் தவறானது என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்றும் இது வழக்கமான நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கை என்று ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து அந்த ரயில்வே அதிகாரி தனியாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் "ரயில்வேயில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை "கேடர் ரீஸ்ட்ரக்சரிங் எனப்படும் பணியிட மறு சீரமைப்பு நடக்கும் . கடைசியாக 2016 இல் நடந்தது தற்போது 2026 இல் நடைபெறுகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது தேவையற்றதாக கருதப்படும் பணியிடங்களை சரண்டர் செய்வது வழக்கமான நடைமுறை . இவ்வாறு கண்டறியப்படும் பணியிடங்களில் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் நீக்கப்பட மாட்டார்கள் அவர்களை தேவைப்படும் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்களே தவிர வேலை பறிபோகாது' என்று கூறியுள்ளார்
மேலும் ரயில் ஓட்டுநர்கள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் கார்டுகள் போன்ற பாதுகாப்பு சார்ந்த அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த ஆட்குறைப்பு பொருந்தாது என்றும் ரயில்வே விதிகளின்படி புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்றால் பயன்பாட்டில் இல்லாத பழைய பணியிடங்களை சரண்டர் செய்ய வேண்டும் . இந்த நிர்வாக நடைமுறை மூலமே புதிய காலி பணியிடங்கள் உருவாக்கப்படும் மேலும் மறு சீரமைப்பு ஊழியர்களுக்கு தேக்க நிலை இன்றி பதவி உயர்வு கிடைக்கவும் வழி வகுக்கும் எனவும் கூறி பலரது சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விளக்கத்தால் இது திட்டமிட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை அல்ல என்பதும் ரயில்வேயை மேலும் நவீனப்படுத்துவதற்கான ஒரு நிர்வாக நடைமுறை என்பதும் உறுதியாகி உள்ளது.