

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரெயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரெயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கவே விரும்புகின்றனர். ஏனெனில் ரெயில்களில் டிக்கெட் செலவு மிக மிகக் குறைவு. இதனால்தான் பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரெயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.
பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரெயில்வே பல்வேறு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருவதுடன் அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ரெயில் பயணத்தை மேலும் வசதியாகவும் சௌகரியமாகவும் மாற்றுவதற்காக இந்திய ரெயில்வே தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
அப்படியான ரெயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமைகள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடியோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் ஒவ்வொரு வகுப்புக்கும் இலவச ‘லக்கேஜ்’ அளவு உண்டு. கொஞ்சம் கூடுதலாக இருந்தால், கட்டணம் செலுத்தி எடுத்துச்செல்லலாம். ஆனால் அளவை தாண்டினால் அபராதம் கட்ட வேண்டிவரும்.
ஆனா பலருக்கும் இதுகுறித்து தெரியவில்லை. எனவே தான் இந்தியன் ரெயில்வே குறைவான உடைமைகள் நிறைவான பயணம் என்ற விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இதில் ஒரு ரெயில் பயணி எவ்வளவு எடையுள்ள லக்கேஜ் வரைக்கும் கொண்டு செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் முதல் ஏசி வகுப்பு பெட்டியில் ஒரு பயணி 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏசியில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில் 40 கிலோ வரையிலும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு அமரும் வகையிலான பெட்டியில் 35 கிலோ வரையிலும் லக்கேஜ் கொண்டு செல்லலாம். கூடுதல் அனுமதியாக பயணிகள் கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்து செல்லலாம்.
இதற்கு சாதாரண உடைமை கட்டணத்தை போல் 1 1/2 மடங்கு செலுத்த வேண்டும். இந்த கூடுதல் அனுமதி வரம்புக்குள் கொண்டு வரப்படும் உடைமைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படமாட்டாது.
இந்த இலவச மற்றும் கூடுதல் அனுமதி வரம்பையும் தாண்டி உடைமைகளை எடுத்துச்சென்றாலோ அல்லது முன்பதிவு செய்யாமல் உடைமைகளை எடுத்துச்சென்றாலோ ரெயில்வே விதிகளின்படி அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.