

தற்போது போக்குவரத்து வசதிகளில் பெரும்பாலோர் நாடுவது ரயில் போக்குவரத்தையே. காரணம் அதிலுள்ள வசதிகள் மற்றும் சொகுசான பயணம். இதில் பயணிக்க பயணச்சீட்டுகளை சில நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்வது தற்போதைய வழக்கமாக உள்ளது. நமது வாட்ஸ்அப்பில் வரும் பயணச்சீட்டு நகல்களை பரிசோதகரிடம் காண்பித்து சரி பார்ப்பதுண்டு. இனி இந்த முறைக்கும் சில விதிகளை விதித்தது இந்திய ரயில்வே.
குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளுக்கான விதிகளை இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. பயணத்திற்கான செல்லுபடியாகும் ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
தேசிய போக்குவரத்து நிறுவனம் ஒரு அறிக்கையில் ரயில் பயணிகளிடையே டிஜிட்டல் பயணச்சீட்டு முன்பதிவுகள் பிரபலமாகிவிட்டதாகக் கூறியுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் பயணச்சீட்டு விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பயணத்தின் போது சிரமங்களும் அபராதங்களும் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு, அந்தச் செயலி பதிவுசெய்யப்பட்ட மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட கைபேசியில் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் மற்றொரு நபர் தனது கைபேசியில் முன்பதிவு செய்த பயணச்சீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை – வாட்ஸ்அப் அல்லது பிற வழிகள் மூலம் அனுப்பினால் – அது செல்லுபடியாகும் பயண அங்கீகாரமாகக் கருதப்படாது" என்றும் "பயணிகள் தங்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசிகளைப் பயன்படுத்தி தாங்களே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும், மேலும் பயணத்தின் போது அதே கைபேசியை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்," என்றும் மேற்கு மத்திய ரயில்வேயின் கோட்ட வர்த்தக மேலாளர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பயணிகள் கவனத்திற்கு சில விதிகள் :
பயணத்தைத் தொடங்குவதற்கு முன் செல்லுபடியாகும் பயணச்சீட்டைப் பெறவும்.
உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் ஃபோனை மட்டும் பயன்படுத்தி, RailOne செயலி வழியாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.
பயணச்சீட்டை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே கைபேசியில் பயணச்சீட்டு இருக்க வேண்டும்.
வாட்ஸ்அப் வழியாகப் பெறப்பட்ட பயணச்சீட்டு அல்லது ஸ்கிரீன்ஷாட் செல்லுபடியாகும் பயண அனுமதி ஆகாது என்பதை நினைவில் வையுங்கள்.
பதிவுசெய்யப்பட்ட கைபேசியில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, அந்தக் கைபேசியின் உரிமையாளருக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பயணத்தின் போது சம்பந்தப்பட்ட கைபேசியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், மேலும் அது போதுமான அளவு சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்கிரீன்ஷாட் மட்டுமே வைத்திருக்கும் பயணிகள், டிக்கெட் இல்லாத பயணிகளாகக் (Without Ticket) கருதப்படுவார்கள். அவர்களுக்கு ரயில்வே விதிகளின்படி அபராதம் (Fine) விதிக்கப்படும்.மேலும் முறையான பயணச்சீட்டு இல்லாமலோ அல்லது முறையற்ற பயணச்சீட்டுடனோ பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச அபராதம், 2026 ஜூன் 19 முதல் ரூ.250-லிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலில் பயணம் செய்யும்போது டிஜிட்டல் முறையில் கீழே உள்ளவற்றை மட்டுமே காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
IRCTC ஆப் (App) அல்லது இணையதளத்தில் லாகின் செய்து, 'Booked Ticket History' பிரிவில் இருக்கும் அசல் டிக்கெட் விவரங்கள்.
அதிகாரப்பூர்வ SMS/மின்னஞ்சல்: டிக்கெட் புக் செய்தவுடன் IRCTC அனுப்பும் அதிகாரப்பூர்வ SMS அல்லது மின்னஞ்சல் (Email).டிஜிலாக்கர் (DigiLocker): இதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அசல் டிக்கெட் நகல்.அச்சுப் பிரதி: வழக்கம் போல காகிதத்தில் அச்சிடப்பட்ட (Printout) டிக்கெட் ஆகியவைகள் செல்லுபடியாகும்.
குறிப்பாக டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் சேர்த்து, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு அசல் அரசு அடையாள அட்டையை (Original ID Proof) கையில் வைத்திருப்பது கட்டாயமாகும்.
இனி ரயில் பயணத்தில் டிஜிட்டல் பயணச்சீட்டு பெறும் போது இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.