

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.
அந்த வகையில் ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளையும், வசதிகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்நிலையில் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு டோக்கன் முறை மூலமாக சுலபமானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் லக்கேஜ் முன்பதிவு சேவையும் இன்று (ஜூலை 31) முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது பயணிகள் தங்களது ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, கூடுதலாக எடுத்துச்செல்லும் பொருட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதி இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இது உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இலவசமாக தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜை எடுத்து செல்லும் பயணிகள் ஆன்லைனில் அறிவித்து முன்பதிவு செய்ய முடியும். இதுவரை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜை எடுத்து செல்லும் பொருட்களை முன்பதிவு செய்ய, பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது அந்த நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் சிறப்பு அம்சங்கள் :
* புதிய சேவையின் கீழ், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு (confirmed ticket) வைத்திருக்கும் பயணிகள், ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதே, தங்கள் கூடுதல் லக்கேஜையும் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும்.
* புதிய விதிகளின்படி, இனிமேல் பயணிகள் இனி ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
* இன்று முதல் (ஜூலை 31) அமலுக்கு வரும் இந்த வசதியின் மூலம், பயணிகள் இலவசமாக தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜை IRCTC அல்லது அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளம் வழியாக முன்கூட்டியே அறிவித்து முன்பதிவு செய்யலாம்.
* ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செயல்முறையின் போது, ரெயில் வகுப்பு, அதிகபட்ச எடை, தடைசெய்யப்பட்ட பொருட்கள், பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் உள்ளிட்ட இலவச லக்கேஜ் வரம்புகள் குறித்த முழு விவரங்களையும் கணினி வெளிப்படையாகக் காண்பிக்கும்.
* ரெயில் நிலையத்தில் கடைசி நிமிடக் குழப்பம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தவிர்த்து, இந்த நடைமுறை பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச அனுமதி மற்றும் எடை வரம்புகள்: (ரயில் லக்கேஜ்)
ஏசி முதல் வகுப்பு (AC First Class) - 70 கிலோ இலவச அனுமதி (கூடுதல் கட்டணத்துடன் அதிகபட்சம் 150 கிலோ வரை).
ஏசி 2-டயர் / முதல் வகுப்பு - 50 கிலோ இலவச அனுமதி (அதிகபட்சம் 100 கிலோ வரை).
ஸ்லீப்பர் வகுப்பு (Sleeper Class) - 40 கிலோ இலவச அனுமதி (அதிகபட்சம் 80 கிலோ வரை).
இரண்டாம் வகுப்பு (Second Class) - 35 கிலோ இலவச அனுமதி (அதிகபட்சம் 70 கிலோ வரை).
ஏசி 3-டயர் / ஏசி சேர் கார் (AC Chair Car) - 40 கிலோ மட்டுமே அனுமதிக்கப்படும்; கூடுதல் எடைக்கு அனுமதி இல்லை.
கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜுக்கும் புதிய விதி :
பெட்டிகளுக்குள் எடுத்துச் செல்லக்கூடிய பைகளின் அதிகபட்ச அளவையும் ரயில்வே நிர்ணயித்துள்ளது.
ஏசி 3-டயர் மற்றும் ஏசி சேர் கார் வகுப்புகளுக்குப் பையின் அதிகபட்ச அளவு 55 செ.மீ x 45 செ.மீ x 22.5 செ.மீ.
ஏசி முதல் வகுப்பு, ஏசி 2-அடுக்கு, ஸ்லீப்பர் மற்றும் பொது வகுப்பு: அதிகபட்ச அளவு 100 செ.மீ x 60 செ.மீ x 25 செ.மீ. என அளவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் :
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான உடைமைகளுக்கு, சாதாரண கட்டணத்தைப் போல 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
குறைந்தபட்ச உடைமை கட்டணம் ரூ.30 ஆகும்.
50 கி.மீ-க்கு மேற்பட்ட தூரங்களுக்கு 10 கிலோ வரையிலான அலகுகளாகக் கணக்கிடப்படும்.
அபராதங்கள்: உங்கள் பயண வகுப்பிற்கான வரம்பை மீறி, அறிவிக்கப்படாத கூடுதல் அல்லது அளவுக்கதிகமான உடைமைகளை எடுத்துச் சென்றால், பயணச்சீட்டு பரிசோதகர்களால் (TTE) விதிக்கப்படும் கடுமையான அபராதங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
கூடுதல் உடைமைகளை (luggage) ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்துள்ள பயணிகள், http://www.parcel.indianrail.gov.in என்ற இணையதளத்தில் பயணம் தொடங்கும் மற்றும் முடிவடையும் நிலையங்கள், ரெயில் எண்கள் மற்றும் பார்சல் விவரங்கள் உள்ளிட்ட பயணத் தகவல்களை உள்ளிட்டு, கூடுதல் உடைமைகளை முன்பதிவு செய்யலாம்.
www.parcel.indianrail.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
போர்ட்டலில் பதிவு செய்து உள்நுழையவும்.
அதன் பிறகு தங்கள் பயண விவரங்கள், அதாவது, புறப்படும் மற்றும் சேருமிட ரெயில் நிலையங்களை உள்ளிடவும்.
Forwarding Note'-இல் லக்கேஜ் குறித்த முழு விவரங்களையும் உள்ளிட்ட வேண்டும்.
கணினி தோராயமான சரக்குக் கட்டணங்களைக் காண்பிக்கும்.
ஆன்லைன் முன்னனுப்புதல் குறிப்பைச் சமர்ப்பிக்கவும்.
படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், பயணி 'e-Forwarding Note'-ஐ அச்சுப் பிரதியை எடுத்து, புறப்படும் ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்தில் தங்கள் லக்கேஜை ஒப்படைக்க வேண்டும்.
ரெயில்வே ஊழியர்கள் லக்கேஜின் எடையைச் சரிபார்த்து இறுதி கட்டணத்தை நிர்ணயிப்பார்கள்.
லக்கேஜ் கட்டணத்தை செலுத்தி ரெயில்வே ரசீதை (RR) பெற்றுக்கொள்ளவும்.
‘டிராக் & ட்ரேஸ்' அம்சத்தைப் பயன்படுத்தி, பயணிகள் தங்கள் லக்கேஜின் தற்போதைய இருப்பிடத்தை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
பார்சல் சேருமிட நிலையத்தை அடைந்ததும் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வரும்.
அதனை தொடர்ந்து உங்கள் லக்கேஜை பெற, சேருமிட நிலையத்தில் அசல் ரெயில்வே ரசீதை (RR) காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.