

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இருபுறமும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலால், ஈரானில் உள்ள ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் 80% இந்தப் பகுதி வழியே தான் வருகிறது. ஹார்முஸ் நீரிணை, உலகின் மிகவும் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாகவும் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை மூடலால், தற்போது ஈரான் அருகே 1,109 மாலுமிகளுடன், 37 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன.
ஹார்முஸ் நீரிணை மூடலால் இனி வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 USD ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியாவின் 37 கப்பல்கள் ஈரானில் சிக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடக்க அமெரிக்கா உதவுமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது மேலோங்கியுள்ளது
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் ராணுவ தளபதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 1,045 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இணையாக ஈரானும் பதில் தாக்குதலை கொடுத்து வருவதால், போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அருகே 1,109 மாலுமிகளுடன், 37 இந்தியக் கப்பல்கள் சிக்கியிருப்பது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியக் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் போரால், எரிபொருள் விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என அதிபர் டிரம்ப் நேற்று கூறிய நிலையில், இந்தியாவிற்கு அமெரிக்கா கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவிற்கு மீண்டும் கச்சா எண்ணெயை விநியோகம் செய்ய தயார் என ரஷ்யாவும் அறிவித்திருந்த நிலையில், இந்தியா ரஷ்யாவின் பக்கம் திரும்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
அடுத்த 25 நாட்களுக்கு இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு இருந்தாலும், அதற்குப் பிறகு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்போதே தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று செய்திகள் பரவி வரும் நிலையில், பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் ஈரானில் சிக்கியுள்ள 37 கப்பல்களை விரைந்து மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்