

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் மூண்டது. உவக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தப் போர் காரணமாக, பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமே எண்ணெய் கப்பல்களின் கடல் வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது தான்.
ஹார்மூஸை திறக்க போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐநாவும் இந்தப் போரில் தலையிட்டு சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. குறிப்பாக அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது.
இதன் காரணமாக 60 நாட்களுக்கு தாக்குதல் கூடாது என்ற தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியும் திறக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தாக்குதல் மீண்டும் தொடரவே, ஹார்மூஸை மூடியது ஈரான். அதோடு ஹார்மூஸை தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஈரான் முடிவு செய்தது. இதற்காக தற்போது ஓமனுடன் கைகோர்த்துள்ளது ஈரான்.
ஈரான் - ஓமன் ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக ரகசியத் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஈரானுக்கு உதவினால், ஓமனை அழிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தார். இருப்பினும் ஹார்மூஸ் ஜலசந்தியில் புதிய கடல் வழிப் பாதையை அமைக்க ஈரானும், ஓமனும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடங்கிய போது தான், உலக நாடுகளுக்கு ஹார்மூஸ் ஜலசந்தி எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல நாடுகளுக்கு ஹார்மூஸ் வழியாகவே எண்ணெய் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல புதிய கடல் வழிப் பாதைக்கான வரைபடத்திற்கு ஈரானும், ஓமனும் ஒப்புதல் அளித்துள்ளன. இவ்விரு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு கூட்டறிக்கையை இறுதி செய்ய தீவிரப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஈரான் - ஓமன் ஒருபுறம் ரகசியத் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழலில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “அமெரிக்கா எதிர்பார்ப்பது போன்ற அமைதி உடன்படிக்கையை ஈரான் ஒப்புக் கொள்ளாது. ஈரான் சரணடைய வேண்டும். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முதன்மை நோக்கம். ஹார்மூஸ் விவகாரத்தில் ஈரானுக்கு உதவினாலோ அல்லது தலையிட்டாலோ ஓமன் மீது குண்டு வீசுவோம்” என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், டிரம்பின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹார்மூஸை திறக்க அணு ஆயுத எதிர்ப்பை கைவிடுவோம் என டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார். இறங்கி வந்த அடுத்த சில நாட்களிலேயே தற்போது பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான 60 நாட்கள் போர் நிறுத்தக் கெடு முடிவுக்கு வரவுள்ள சூழலில், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, பதற்றத்தைக் குறைத்து அமைதியான முறையில் உடனடித் தீர்வு காண வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.