

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கியமாக ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. ரெயில்களில் கல்வி, வேலை, சொந்த வேலை காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நீண்ட தூர பயணத்தின்போது அலுப்பு, சோர்வு, உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரெயில்கள் தான் சரியான தேர்வு. அதே போல முதியவர்களை அழைத்துபோவதற்கும் குழந்தைகளை விளையாட்டு காட்டி அழைத்துபோவதற்கும் ரெயில்கள் கொடுக்கும் செளகர்யத்தை வேறு எதுவும் தராது. இந்திய ரெயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.
இதில் தோராயமாக நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரெயில்கள், வந்தே பாரத் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என இதில் ஏராளம். குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு களைப்பின்றி, வசதியாக செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வர உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாகச் சுற்றுலா செல்லத் தயாராகி வருகின்றனர். மற்ற பயண முறைகளுடன் ஒப்பிடுகையில், ரெயில் பயணம் எப்போதும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் விருப்பமான தேர்வாக இருப்பதால், டிக்கெட் முன்பதிவுகள் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால், குழந்தைகளுடன் பயணிக்கும் பல பெற்றோர்களுக்கு, குழந்தை டிக்கெட் விதிகள் பற்றி இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ரெயில் டிக்கெட் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்தியன் ரெயில்வே வழங்கி வருவதை போல குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டணத்தில் (Child Fare in Railways)பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குழந்தைகளுக்கு ரெயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் உள்ளது பலருக்கும் தெரிவதில்லை. அதுகுறித்து அனைவரும் அறிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு.
* உங்கள் குழந்தைக்கு 5 வயது நிறைவடையவில்லை என்றால் அவர்களுக்கு ரெயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது, முழுக்க முழுக்க இலவசம் தான். நீங்கள் குழந்தைகளுக்கு என்று தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
அதேசமயம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக அமர்வதற்கு இருக்கையோ (Seat) மற்றும் படுப்பதற்கு பெர்த்தோ (Berth) ஓதுக்கப்பட மாட்டாது. நீங்கள் உங்கள் குழந்தையை பயணம் முழுவதும் மடியில் வைத்து கொண்டு தான் பயணிக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் தங்களது சீட்டில் தான் அவர்களை அமர வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிக்க விரும்பினால், குழந்தையை உங்கள் இருக்கையிலேயே வைத்துக் கொள்ளலாம்.
* அதேசமயம் உங்கள் குழந்தைக்கு ஐந்து வயது நிறையவடைவில்லை என்றாலும், தனியாக பெர்த் அல்லது இருக்கை வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் முழு கட்டணம் செலுத்தி டிக்கெட்டை எடுக்க வேண்டும்.
* மேலும் 5 வயது முதல் 12 வயதுடைய உங்கள் குழந்தைக்கு பெர்த் வேண்டாம் என்றால் ரெயிலில் பயணிக்க பாதிக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதாவது மொத்த டிக்கெட் விலையில் 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆனாலும் உங்கள் குழந்தைகளுக்கு தனியாக சீட் அல்லது பெர்த் ஒதுக்கப்பட மாட்டாது.
* குழந்தைகளுக்கு வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டண சலுகை எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என சில குறிப்பிட்ட ரெயில்களின் வகைகளை பொறுத்தும், ஸ்லீப்பர் கோச், ஏசி கோச் என பெட்டிகளின் வகைகளை பொறுத்தும் மாறுபடும்.
* மேலும் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். ஆதுவே உங்கள் குழந்தைகளுக்கு 12 வயதிற்கு மேல் ஆகிறது என்றால் முழுத்தொகையும் கட்டி தான் டிக்கெட் எடுக்க வேண்டும். 12 வயதிற்கு மேல் எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. அப்படி நீங்கள் உங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு உங்கள் குழந்தை 4 வயதுக்குட்பட்டவராக இருந்து, அவருக்கு டிக்கெட் வேண்டாம் என்றால் நீங்கள் பிறப்புச் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
* டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 5-11 வயது குழந்தைக்கு தனி இருக்கை தேவையில்லை என்றால், Child (No Seat/Berth என்ற ஆப்ஷனையும், இருக்கை வேண்டுமென்றால், Child (Berth/Seat Required) என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்து, முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, குழந்தையின் வயதைச் சரிபார்க்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற அடையாளச் சான்று (ஆதார் அட்டை போன்றவை) தேவைப்படும்.
- எனவே, குழந்தையுடன் விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தனி இடம் வேண்டுமா அல்லது தங்களோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாமா என்பதை முடிவு செய்துவிட்டு முன்பதிவு செய்வது பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும்.