

பல ஆண்டுகளாக, இந்தியன் ரெயில்வே நாட்டின் மக்களின் பயணத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரெயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பொது போக்குவரத்தில் பேருந்தை விட ரெயில் போக்குவரத்து தான் சிறிவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பேவரைட். அதுமட்டுமின்றி பேருந்தை ஒப்பிடும் போது ரெயிலில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கு இது பிடித்தமான மற்றும் சிக்கனமாக போக்குவரத்து சேவையாக உள்ளது.
சிலநேரங்களில் ரெயிலில் பயணம் செய்யத் திட்டமிடும்போது, கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் தவிப்பது பலருக்கும் நடக்கும் ஒன்று. சிலசமயங்களில் வெயிட்டிங் லிஸ்ட் அல்லது RAC டிக்கெட் கிடைப்பவர்களுக்கு இருக்கை கிடைப்பது நிச்சயமற்றதாக இருக்கும்.
இத்தகைய சூழலில்,அவசரத் தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்பவர்கள் அவசர காலங்களில், ரெயில்வேயின் எமர்ஜென்சி ஒதுக்கீட்டின் (Emergency Quota - EQ)மூலம் காத்திருப்பு டிக்கெட்டை உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையாக மாற்றலாம்.
ஆனால் இந்த ஒதுக்கீடு அவசரப் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இது அனைத்து பொதுமக்களுக்குத் திறந்திருக்காது. இரயில்வே அமைச்சகம் மற்றும் அதிகாரப்பூர்வ முன்பதிவு விதிகளின்படி, இது குறிப்பிட்ட வகைப் பயணிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கெனச் சில குறிப்பிட்ட விதிகளும் முன்னுரிமைகளும் உள்ளன.
எமர்ஜென்சி அல்லது அவசரகால ஒதுக்கீட்டிற்கு யார் தகுதியானவர்கள்?
இரயில்வே அமைச்சகத்தின் தகவல்படி, இந்த அவசரக்கால ஒதுக்கீடு முதன்மையாக உயர்மட்ட அதிகாரிகளின் (High Official Requisition - HOR) பயணத் தேவைகளுக்காக அதாவது, மத்திய அரசு அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக(MPs) உருவாக்கப்பட்டது.
இந்த வகைகளைத் தவிர, ரெயில்வே நிர்வாகம் மற்ற அவசரக் கோரிக்கைகளையும் பரிசீலிக்கலாம். இதற்கு காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) இருக்கும் சாதாரணப் பயணிகளும் விண்ணப்பிக்க முடியும் என்றாலும் பின்வரும் அவசரக் காரணங்களுக்காக மட்டுமே விண்ணப்பிக்கலாம்:
மரணம் அல்லது குடும்பத்தில் ஏற்படும் துயரம்,
அவசர அலுவல் பணி,
அவசர வேலைவாய்ப்பு நேர்காணல்கள்,
கடுமையான நோய்,
தீவிர மருத்துவ சிகிச்சைக்காகப் பயணம் மேற்கொள்ளுதல்
போன்ற காரணங்களின் அடிப்படையில், கோரிக்கையின் தன்மை மற்றும் பயணிகளின் நிலையைப் பொறுத்து, உயர்மட்ட அதிகாரிகளின் ஒதுக்கீட்டிற்கு பிறகு மீதமுள்ள படுக்கைகள் ஒதுக்கப்படலாம்.
அவசர ஒதுக்கீட்டு இருக்கைகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன?
ஒவ்வொரு நாளும் இந்த ஒதுக்கீட்டிற்காகப் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன. ரெயில்வே அமைச்சகத்தின் முன்னுரிமைப் பட்டியலின் (Warrant of Precedence) படி இவை பரிசீலிக்கப்படுகின்றன.
இதற்குப் பிறகு, பல்வேறு தரப்பிலிருந்து வரும் மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. பயணத்தின் அவசரம், பயணிகளின் அதிகாரப்பூர்வ நிலை மற்றும் ஒதுக்கீட்டில் படுக்கைகள் கிடைப்பது ஆகியவற்றைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்துக் கூறும்போது, ‘அவசரக்கால ஒதுக்கீட்டில் முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் சுயப் பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பிறகு மீதமுள்ள இடங்கள், பயணிகளின் சமூக அந்தஸ்து மற்றும் அவர்களின் பயணத்தின் அவசரத் தன்மையைப் பொறுத்து மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்குப் பயணிகளின் விவரங்கள், அவசர தேவைக்கான காரணங்கள் அடங்கிய முறையான எழுத்துப்பூர்வமான கடிதம் (Written Request) சமர்ப்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு உண்மையான அவசரத் தேவைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இது அனுமதிக்கப்படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் அல்லது முறையற்ற வழிகளில் இந்த வசதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பொருட்டு, இந்தியன் ரெயில்வே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, அதிகாரப்பூர்வ ரெயில்வே முன்பதிவு நடைமுறையின்படி, மண்டல தலைமையகங்கள் (Zonal Headquarters), கோட்ட தலைமையகங்கள் (Divisional Headquarters) மற்றும் சில முக்கியமான ரெயில் நிலையங்களில் இதற்கெனத் தனி 'அவசர ஒதுக்கீட்டு செல்கள்' (EQ Cells) செயல்படுகின்றன. ரெயில் கிளம்புவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்தச் செல்கள் மூலமாகவே இறுதிப் பட்டியல் (Chart Preparation) தயார் செய்யப்பட்டு டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுகின்றன.