

ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலாகின்றன.ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால் பணம் ரீஃபண்ட் கிடையாது என்கிற புதிய விதியை அறிமுகப்படுத்துவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, சார்ட் (Chart) தயாரிக்கும் நேர மாற்றங்களுக்கு ஏற்ப டிக்கெட் ரத்து செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த 48, 12 மற்றும் 4 மணிநேரம் என்ற கால அளவுகள், தற்போது முறையே 72, 24 மற்றும் 8 மணிநேரம் என மாற்றப்பட்டுள்ளன.
ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கும் 72 மணி நேரத்துக்கும் இடையில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் சேர்த்து பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படுவதற்கு8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும்.ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.
இந்த மாற்றங்கள் மூலம் ரயில்களில் காலியாகும் இருக்கைகளை குறைத்து, அவற்றை மற்ற பயணிகளுக்கு வழங்கும் வாய்ப்பை அதிகரிப்பதே ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. இதன் மூலம், பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிடும்போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அவசர சூழ்நிலைகளில் டிக்கெட் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், திருப்பித் தொகை குறைவாக இருக்கும் என்பதால், பயணிகள் இழப்புகளை தவிர்க்க முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக டிக்கெட்டுகளை ரத்து செய்ய குறிப்பிட்ட நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது நாட்டின் எந்தவொரு ரயில்வே கவுண்டரிலும் டிக்கெட்டுகளை ரத்து செய்து ரீஃபண்ட் பெறலாம்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் ரீஃபண்ட் பெற டி.டி.ஆர் (TDR) தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இனி இந்தத் தேவை இல்லை; ரீஃபண்ட் தொகை தானாகவே (Automatic) பயனரின் கணக்கிற்குத் திரும்பும்.