

இந்திய விளையாட்டுத் துறையின் முக்கிய அம்சமாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் திகழ்கிறது. கடந்த 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட 60,000 பேர் அமரக்கூடிய நேரு ஸ்டேடியம் மொத்தமாக 102 ஏக்கரில் அமைந்துள்ளது.
இருப்பினும் ஸ்டேடியத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமலேயே இருப்பதால், தற்போதைய ஸ்டேடியத்தை இடித்து விட்டு புதிதாக ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க மத்திய விளையாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது. இதறகான கால அவகாசம் இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், தற்போது வரை இந்த முடிவு ஆலோசனை கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இநதியா ஆர்வம் காட்டி வருவதால், அதற்கான முக்கிய நகர்வாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் நேரு ஸ்டேடியத்தில் உள்ளது. அதோடு இங்கு கால்பந்து மைதானமும் அமைந்துள்ளது. மேலும் கடந்த 1984 மற்றும் 1991 ஆகிய இரு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளும் இங்கு நடைபெற்றன. இருப்பினும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கு இங்கிருக்கும் மைதனாம் ஏற்புடையது அல்ல என விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடைபெறவே இலலை.
கடந்த 2010 ஆம் ஆண்டில் காமன்வெஎல்த் விளையாட்டை நடத்துவதற்காக, ரூ.961 கோடி செலவில் நேரு ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இங்கு U17 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தும் விதமாக, அதிநவீன வசதிகளுடன் இங்கு ஒரு விளையாட்டு நகரத்தை அமைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காகவே நேரு ஸ்டேடியத்தை இடிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளுக்கு முன்பாக ரூ.50 கோடி செலவில் மைதனாத்தில் சில நவீன வசதிகளை ஏற்பாடு செய்ததோடு, 10,000 இருக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டன. கத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப இங்கு விளையாட்டு நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது வரை ஆலோசனை கட்டத்தில் மட்டுமே இருக்கும் இந்தத் திட்டம், விரைவில் திட்டமிடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரு ஸ்டேடியத்தை இடித்து விட்டு அமைக்கப்பட உள்ள விளையாட்டு நகரத்தில், விளையாட வரும் வீரர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம் வீரர்கள் இங்கேயே தங்க முடியும். 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பும் இந்தியாவின் கனவுக்கு, மத்திய அரசின் இந்த முடிவு முதல் படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஒலிம்பிக் போட்டிகளை நம் நாடு நடத்தி விட்டால், விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயர் உச்சத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தற்போதைய நேரு ஸ்டேடியம் தான் சரியான இடமாக இருக்கும் என்பதாலேயே மத்திய அரசு இம்முடிவை கையில் எடுத்துள்ளது.