

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களை பெற்று தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் ஏழாம் தேதி பதவியேற்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் தந்த வெற்றிக் களிப்பில் இருக்கும் தவெக கட்சியின் தலைவர் விஜய் நாளை காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தொடர்ந்து நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவி ஏற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மே 7 அன்று விஜய் பதவியேற்பு பற்றி தற்போது சில ஊகங்கள் மட்டும் எழுந்துள்ள நிலையில் இந்த விஷயம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தவெக கட்சி முதல் தேர்தலிலேயே வரலாறு காணாத வெற்றியை அடைந்தாலும் ஆட்சி கோர இன்னும் 11 இடங்கள் தேவை எனும் தற்போதைய நிலை இந்த செய்தியை மறுக்க வைக்கிறது.
தவெக கட்சியினர் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் மெஜாரிட்டிக்கு குறைவாக 108 இடங்கள் பெற்று முழு பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலில் முறைப்படி ஆளுநரை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோருதல் மற்றும் ஆட்சி அமைக்கத் தேவையான பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு திரட்டுதல் ஆகியவையே தற்போது விஜய் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.
மேலும் அவசியமெனில் 2 வாரம் வரை மெஜாரிட்டியை நிரூபிக்க கால அவகாசம் கேட்பது போன்ற செயல்முறைகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மே 7 பதவியேற்பு எனும் தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்கின்றனர்.
ஆட்சி அமைக்க தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் அழைப்பு விரைவில் விஜய்க்கு வரும் என்றும் அதன் பின்னர் அரசு அமைக்கும் செயல்முறை தீவிரமாக துவங்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி வாகை சூடி இதே மே 7-ந்தேதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பொதுவாக புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆளுநர் வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் பவனில் தான் நடைபெறும். ஆளுநரே முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்பதால் அங்கு தான் பெரும்பாலும் விழா நடக்கும்.
சில நேரங்களில் அரசியல் சூழ்நிலைகள் அல்லது கூட்ட நெரிசல் காரணமாக பெரிய மைதானங்கள் அல்லது அரங்குகள் பதவியேற்பு விழாவுக்காக தேர்ந்தெடுக்கப்படும். அதன்படியே விஜய் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழாவை நடத்த எண்ணியிருக்கலாம்.
தற்போது மெஜாரிட்டி பெற மற்ற கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் அவை சுமுகமாக நிறைவேறி விரைவில் முதல்வராக பதவியேற்கும் விஜய்க்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.