

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் டிவிஷன் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ரோஹித் தியோ, தனது பதவியை நீதிமன்ற வளாகத்திலேயே ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நீதிபதி ஒருவர் தன் பதவியை நீதிமன்ற வளாகத்திற்குள் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் டிவிஷன் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ரோஹித் தியோ 2017 ஜூன் மாதம் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது நீதிபதி ரோஹித் தியோ கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 2019 இல் நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்ற அறையில் தனது ராஜினாமாவை அறிவித்த நீதிபதி டியோ, வக்கீல்களை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதோடு, சில சமயங்களில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கேட்டார். தனது சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி, திறந்த வெளி நீதிமன்றம் முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இன்றே எனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவிட்டேன் என உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
மூத்த நீதிபதி ரோஹித் தியோ முக்கிய தீர்ப்புகள்
முன்னதாக டில்லி பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜி. என். சாய்பாபா, நக்சலைட் அமைப்புடனான தொடர்பு குறித்த வழக்கில், 2014ல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் நடந்த அப்பீல் வழக்கை நீதிபதி ரோஹித் தியோ, அனில் பன்சால் ஆகியோர் விசாரித்து 2022 அக்டோபரில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியர் சாய்பாபா தொடர்பான வழக்கை மீண்டும் அப்பீல் செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பேலா திரிவேதி அமர்வு விசாரித்தது. நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில்பன்சால் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து பேராசிரியர் ஜி. என். சாய்பாபா தொடர்ந்து சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், நாக்பூர்-மும்பை சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலை , ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரியில் மஹாராஷ்டிரா அரசு கொண்டு வந்த தீர்மானமத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ரோஹித் தியோ முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இதில் மஹாராஷ்டிரா அரசுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் நீதிபதி ரோஹித் தியோவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் காரணமாக ரோஹித் தியோ பதவி விலகுவதாக பகிரங்கமாக அறிவித்திருப்பது நீதிமன்ற வட்டாரங்கள் தெரவிக்கின்றன.