

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவி வரும் கடுமையான போரால், உலகளவில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போரால், கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மூஸ் நீரணையை ஈரான் அரசு மூடியது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது வரை உயர்த்தப்படவில்லை என்றாலும், போர் தொடர்ந்தால் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதை தடுத்தால், ஈரான் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், “உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் நோக்கத்தில் ஈரான் செயல்பட்டு வருகிறது. ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதை தடுத்தால், ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை காட்டிலும் 20 மடங்கு அதிகமான தாக்குதல் நடத்தப்படும்.
ஈரானை ஒரு நாடாக மீண்டும் கட்டமைக்க முடியாத அளவிற்கு தாக்குதல் இருக்கும். மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும். ஆனால் இது நடக்கக் கூடாது என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 100 டாலரை எட்டியது. இந்நிலையில் விரைவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையான போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்ததை அடுத்து, இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 90 டாலராக சரிந்துள்ளது.
இருப்பினும் போர் இன்னும் முடிவடையாத சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு திறந்தால் மட்டுமே ஒரு முடிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஈரான் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் புதிய உச்சபட்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள முஜ்தபா கமேனியை கொலை செய்யும் நோக்கத்தில் குறி வைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.