தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில், இன்று விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலான வாக்காளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இதன் காரணமாக வாக்காளர்களுக்கு உதவும் வகையில் தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை நேற்று அறிவித்தது. மேலும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இருப்பினும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு பொதுவாக ரூ.5,354 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இன்று இந்தக் கட்டணம் ரூ.17,527 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்வதற்கான விமான கட்டணம் ரூ.3,319 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.12,027 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.14,237 ஆகவும், மதுரைக்கு ரூ.13,320 ஆகவும் விமான கட்டணம் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், பயணிகள் மாற்றுப் பாதையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது 3 மடங்கு விமான கட்டண உயர்வு பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.