

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 234 தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், சர்ச்சைக்குரிய குறுந்தகவல்களை அனுப்பினால் சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே ஏஐ மூலம் தலைவர்களின் புகைப்படத்தை தவறாக சித்தரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான குறுந்தகவல்களை (SMS/WhatsApp) பரப்புவது சட்டப்படி குற்றமாகும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, உறுதி செய்யப்படாத அல்லது மற்றவர்களைத் தூண்டும் விதமான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜாதி, மதம் அல்லது மொழி ரீதியான பிரிவினையைத் தூண்டும் செய்திகள், தனிநபர் விமர்சனங்கள் மற்றும் அவதூறு பரப்பும் தகவல்கள் அனுப்பப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள 'சமூக ஊடக கண்காணிப்பு குழுக்கள்' வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்கும். உங்களுக்கு வரும் தேர்தல் தொடர்பான தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் படி தேர்தல் நேரத்தில் தவறான பிரச்சாரம் அல்லது அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.