

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 வது நடைமேடைகளில் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவையில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதோடு, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் ரயில் பயணிகள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் இந்தப் பணிகள் 45 நாட்களுக்குள் முடிக்கப்படும் எனவும், அதுவரை பயணிகளுக்கு உதவும் வகையில் பேருந்து சேவை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி முதல் எப்போதும் போல ரயில் சேவை இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் பாதிக்கும் மேல் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ரயில் பயணிகள் பலரும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் அடுத்த ஓரிரு நாட்களில் முடிவடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வருகின்ற ஏப்ரல் 5 (வெள்ளிக்கிழமை) முதல் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவை சீராக இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.