

மேற்காசியாவில் நடந்து வரும் போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் பெரிய அளவில் பிரச்சினை இல்லை. இருப்பினும், வணிக சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாநிலங்களுக்கான வணிக எல்பிஜி சிலிண்டர் 70% வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மருந்து, உணவு மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கும் 70% சிலிண்டர் ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்.
பெட்ரோலிய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பால் கண்ணாடி, எஃகு, பேக்கேஜிங் மற்றும் மருந்து உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு பயன்படுத்திய சிலிண்டர் அளவில் 70 சதவீதத்தை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இருப்பினும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ள இந்த முக்கிய துறைகள் அனைத்திற்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு 0.2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டே எரிவாயு விநியோகம் செய்யப்படும்.
இதற்கு முன்னதாக 5 கிலோ சிலிண்டர்களை வாங்குவதற்கு, எவ்வித முகவரி சான்றும் தேவையில்லை என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது