

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியுடன் கைகோர்த்திருக்கிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் தொகுதி மறுவரையறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆந்திர முதல்வர் மட்டும் எவ்வித எதிர்ப்பும் கொடுக்காத நிலையில் அவரை குறிவைத்து பதிவிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர்.
மாணிக்கம் தாகூரின் எக்ஸ் பதிவில், “சந்திரபாபு நாயுடு அவர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். கொள்கைகளை விட அதிகாரமே மேலானது. சொந்த மாமனாருக்கே துரோகம் செய்யத் துணிந்த ஒருவர், இன்று தனது அரசியல் பிழைப்பிற்காக ஆந்திரப் பிரதேசத்தின் எதிர்காலத்தையே அடகு வைக்கத் தயாராகிவிட்டார்.
நரேந்திர மோடியுடன் கைகோர்த்துக் கொண்டு, தென்னிந்தியாவின் குரலை நசுக்கும் பாகுபாடான தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை அவர் ஆதரிக்கிறார். அநீதியை எதிர்த்துப் போராட மறுக்கிறார். அநீதியைத் தட்டிக் கேட்காமல் இருப்பதற்கு அவர் எதையும் செய்வார்.
முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே இந்த நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலம், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் வாயிலாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டிய பிற்படுத்தப்பட்ட (BC) சமூகப் பெண்களின் வாய்ப்புகளை அவர் திட்டமிட்டே முடக்குகிறார். இது தலைமைத்துவம் அல்ல. இது திட்டமிடப்பட்ட சரணாகதி.
குடும்பத்திற்குத் துரோகம் செய்வதில் இருந்து, மக்களுக்குத் துரோகம் செய்வது வரை அவரது செயல்பாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.