தமிழ்நாட்டில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில், வாக்காளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக நாளை சிறப்பு ரயில் ஒன்றை இயக்குகிறது தெற்கு ரயில்வே. நாளை மதியம் சென்னை எழும்பூரில் இருந்து 1:25 மணிக்கு புறப்படும் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில், நாகர்கோவில் வரை இயக்கப்பட உள்ளது.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி வழியாக நள்ளிரவு 2:30 மணிக்கு நாகர்கோயிலை இந்த சிறப்பு ரயில் சென்றடையும்.
நாளை இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு, இன்று மதியம் 2:15 மணிக்கு தொடங்க உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், தெற்கு ரயில்வே ஒரு சிறப்பு ரயிலை இயக்கவிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாகர்கோயில் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பெரும்பாலான தென் மாவட்டங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று மதியம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.