

தமிழக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது. பள்ளி குழந்தைகள் தொடங்கி பெண்கள், வயதானவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் ஒரு வீடு கட்டும் திட்டமாகும். இந்த திட்டம் 2030-க்குள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளை அகற்றி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்டவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் ஆர்சிசி கூரையுடன் கூடிய புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கட்டித் தரப்படும்.
அதே சமயம், பயனாளர்கள் தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினாலும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை கடனும் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலைஞர் கனவு இல்லம் மூலம் வீடு கட்ட லோன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் மொத்தம் 1700 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளதால், வீடு கட்ட விரும்புபவர்கள் லோன் பெற, அவர்களுக்கு லோன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் பொருட்டு இன்று காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கிளில் லோன் மேளா, மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பயனாளிகள் வீடுகள் கட்ட ஏதுவாக கூடுதல் தொகை ரூ.1.00 லட்சம் அவரது கணக்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் செலுத்தப்படும்.
இந்த முகாமிற்கு வரும் வங்கியின் முகாம் அலுவலர்கள் வங்கி சேமிப்பு கணக்கு படிவம், கடன் விண்ணப்பம் ஆகியவற்றை தங்களுடன் எடுத்து வருவார்கள். வீடு கட்ட கூடுதல் தொகை தேவைப்படும் பயனாளிகள் முகாமிற்கு வரும் போது ஜாமீன்தாரர்கள் இருவரை அவர்களுடன் அழைத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் லோன் தேவைப்படும் பயனாளி இந்த லோன் முகாமிற்கு செல்லும் போது சில ஆவணங்களை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, கலைஞர் கனவு இல்லம் ஒதுக்கீட்டு ஆணை அசல், அவரது புகைப்படம் -3, பயனாளி மற்றும் 2 ஜாமீன்தாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள், மனுதாரரின் பான் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
எனவே, இன்று (வெள்ளியன்று) சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கவிருக்கும் லோன் மேளாவில் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.